வேட்புமனுவில் நேற்று கையொப்பமிட்டார் ஜீவன்

நுவரெலியா மாவட்டத்தில் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணி பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் நேற்று கையொப்பமிட்டார்.

கொட்டகலையிலுள்ள தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்வில் இ.தொ.காவின் பொதுச் செயலாளர் அனுஷியா சிவராஜா, உப தலைவர் செந்தில் தொண்டமான், பொருளாளர் மருதபாண்டி ரமேஷ், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இராஜதுரை உட்பட இ.தொ.காவின் உயர்மட்ட பிரமுகர்கள் பங்கேற்றனர்.

பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மொட்டு சின்னத்தில் நுவரெலியா மாவட்டத்தில் களமிறங்கியிருந்த தலைமை வேட்பாளர் ஆறுமுகன் தொண்டமான் கடந்த 26ஆம் திகதி மரணமடைந்தார்.

இதனால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு அவரின் மகனான ஜீவன் தொண்டமானை நியமிக்குமாறு கடந்த 27ஆம் திகதி பொதுஜன பெரமுனவின் தலைவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து இ.தொ.கா. பிரமுகர்கள் கோரிக்கை விடுத்தனர். பொதுச் செயலாளரின் கையொப்பத்துடனான கடிதத்தையும் கையளித்தனர்.

இந் நிலையிலேயே மேற்படி கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டு ஜீவனிடம் கையொப்பம் வாங்குவதற்காக பொதுஜன பெரமுனவின் சட்டத்தரணிகள் குழுவினர் நேற்று கொட்டகலைக்கு வந்திருந்தனர்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஐந்து வேட்பாளர்கள் இம்முறை போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹட்டன் சுழற்சி கிருஷாந்தன்   


Add new comment

Or log in with...