மத்திய மாகாணத்தில் இதுவரை 2152 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக மத்திய மாகாண சமூக மருத்துவ நிபுணர் சுரங்க பெர்னாண்டோ தெரிவித்தார்.
கண்டி மாவட்டத்திலிருந்து 1267 பேரும், மாத்தளை மாவட்டத்தில் 760 பேரும், நுவரெலியாவிலிருந்து 125 நோயாளிகளும் பதிவாகியுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
மத்திய மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் காலை நடைபெற்ற மத்திய மாகாண கொரோனா மற்றும் டெங்கு தடுப்பு குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சமூக சுகாதார வைத்திய நிபுணர் இத் தகவலை தெரிவித்தார். மேலும் இவ் வருடத்திற்குள் டெங்கு தாக்கம் தொடர்பில் கண்டி மாவட்டத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.
கண்டி மாவட்டத்தில் கண்டி நகர எல்லை உள்ளிட்ட வெரெல்லகம, உடுநுவர, யடினுவர மற்றும் குண்டசாலை ஆகிய பிரதேச சபைக்கான பகுதிகளிலும், டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.அதே போன்று மாத்தளை மாவட்டத்தில், மாத்தளை மற்றும் தம்புள்ள நகர சபை பிரிவுகள், உக்குவளை பிரதேச பிரிவுகளிலும் அதிக எண்ணிக்கை பதிவாகியிருக்கின்றன.
மேலும் நுவரெலிய மாவட்டத்தில் அம்பகமுவ பிரதேச நிருவாகப் பிரிவிலும் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறினார். மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யு கமகே தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில். மத்திய மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளூராட்சி சபை தலைவர்கள், பிரதி பொலிஸ் மாஅதிபர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
எம்.ஏ. அமீனுல்லா
Add new comment