அஷ்ரப் வைத்தியசாலையில் ஒரே சூலில் 3 குழந்தைகள் பிறப்பு

இரு மாதங்களில் 3 ஆவது நிகழ்வு

பொத்துவில்  பகுதியை  சேர்ந்த பெண்மணி  ஒருவர் 3 குழந்தைகளை ஒரே சூலில் பெற்றெடுத்துள்ளார்.

இந்நிகழ்வு நேற்று (28)  அம்பாறை மாவட்டம் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் நிகழ்ந்துள்ளது.

குறித்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட  35 வயதுடைய பொத்துவில் நகரப் பகுதியை சேர்ந்த  பெண் ஒருவருக்கு பிரவச வலி ஏற்பட்டதை அடுத்து நேற்று (28) காலை கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன்போது அங்கு மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையின் பின்னர் 3 குழந்தைகள் பெறப்பட்டுள்ளன.

இதில் 2 ஆண் குழந்தைகளும் 1 பெண் குழந்தைகளும் கிடைக்கப் பெற்றுள்ளன. தாயும் சேயும் நலமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

அஷ்ரப் வைத்தியசாலையில் ஒரே சூலில் 3 குழந்தைகள் பிறப்பு-Pottuvil Women Delevers 3 Babies in a Birth-Kalmunai-Ashraff Hospital

குறித்த சத்திர சிகிச்சையினை, அறுவை சத்திர சிகிச்சை நிபுணர் கிரந்த பிரசாத் உள்ளடங்கலாக  மகப்பேற்று வைத்திய  நிபுணர் ராஜிவ்  விதானகே தலைமையிலான வைத்திய குழுவினர் மயக்க மருத்துவ நிபுணர் சுதேஸ்வரியின் கண்காணிப்பில் மேற்கொண்டனர். 

இதில் இரு ஆண் குழந்தைகளும்  தலா 1,910 கிராம், 1,960 கிராம் மற்றும் பெண் குழந்தை  1,480 கிராம்  நிறையுடன் ஆரோக்கியமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னர் இம்மாதம் மற்றும் கடந்த மாதம், நிந்தவூர் மற்றும் கோமாரி பகுதியைச் சேர்ந்த இரு  பெண்களுக்கு ஒரே சூலில் 3 குழந்தைகள் பிறந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வைத்தியசாலைகளில் நோயாளிகள் வரவு குறைவடைந்துள்ள நிலையில் இந்த அபூர்வ பிரசவம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

(பாறுக் ஷிஹான்)


Add new comment

Or log in with...