4 சிறுவர்கள் உள்ளிட்ட 268 பேர் கட்டாரிலிருந்து வருகை

கட்டாரில் வேலைவாய்ப்புக்காக புறப்பட்டுச் சென்று, இலங்கைக்கு வர முடியாமல் இருந்த இலங்கையர்கள் 268 பேர், இன்று (27) அதிகாலை ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் விசேட விமானம் மூலம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

அவர்கள் கட்டாரின் டோஹாவிலிருந்து, ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் UL 218 எனும் விசேட விமானம் மூலம், இன்று அதிகாலை 5.04 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

குறித்த விமானத்தின் வணிக வகுப்பில் 10 பேரும், சாதாரண வகுப்பில் 258 பேரும் வருகை தந்ததோடு, அவர்களுடன் 04 சிறுவர்களும் வருகை தந்தனர்.

இவ்வாறு வருகை தந்தோரும், அவர்களது பயணப் பொதிகளும் தொற்றுநீக்கம் செய்யப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, அவர்கள்  மத்தியில் கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் ஏதேனும் தென்படுகின்றதா என்பது தொடர்பில், விமான நிலைய வைத்திய பிரிவினரும் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளும் பரிசோதித்தனர்.

இதன் பின்னர், இராணுவத்தினரின் பஸ் வண்டியில் அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தலுக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். 


Add new comment

Or log in with...