பேராசிரியர் ஹூலுக்கு எதிராக முறைப்பாடு செய்ய முடிவு

சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான பேராசிரியர் ரட்னஜீவன் ஹூலின்  செயற்பாடுகளில் அதிருப்தி கொண்டிருக்கும் ஆணைக்குழு, அரசியலமைப்பு பேரவைக்கு முறைப்பாடுகளை முன்வைக்க தீர்மானித்திருப்பதாக, தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தினகரனுக்கு  தெரிவித்தார்.

அண்மைக்காலமாக பேராசிரியர் ஹூலின் செயற்பாடுகள் ஆணைக்குழுவுக்கு பெரும் நெருக்கடிகளை தோற்றுவிப்பதன் காரணமாகவே இவ்வாறானதொரு முடிவை எடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாக ஆணைக்குழு தலைவர் குறிப்பிட்டார்.

சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவில்  மூன்று உறுப்பினர்கள் உள்ளனர். ஆணைக்குழுவின் தவிசாளராக நான்  நியமிக்கப்பட்டுள்ள ஆரம்ப காலம் தொட்டே பேராசிரியர் ரட்னஜீவன் ஹூலின் செயற்பாடுகள் எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாதனவாகவே  காணப்பட்டன. ஆனால் ஆணைக்குழு எடுக்கும் தீர்மானங்களுக்கு அவரது குறுக்கீடுகள் தடையாக அமையவில்லை. ஆணைக்குழு உறுப்பினர்களுக்குரிய கூட்டுப் பொறுப்பை கூட பல சந்தர்ப்பங்களில் அவர் மீறியுள்ளார். இதனை நான் பல தடவை அவரிடம் எடுத்துக் கூறி இருக்கின்றேன்.

ஆனால் பேராசிரியர் ஹூல் ஆணைக்குழு தீர்மானங்களுக்கு முரண்பட்டவராகவே எப்போதும் காணப்படுகின்றார். அவர் ஒரு தலைப்பட்சமாக கருத்துக்களை ஆணைக்குழுவிலும் வெளியேயும் தெரிவித்து வருகின்றார். இதனால் தேர்தல்கள் ஆணைக்குழு பெரும் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் நாட்டு மக்கள் தேர்தல் ஆணைக்குழு மீதான நம்பிக்கையை இழக்கும் நிலை உருவாகி வருகின்றது.

சுயாதீன தேர்தல் ஆணைக்குழு எடுக்கும் தீர்மானங்கள் முடிவுகள் ஏகமனதாக இருக்க வேண்டும். முடிவுகளில் எவரொரு உறுப்பினரும் முரண்பட முடியாது. இந்த நிலையில் பேராசிரியர் ஹூல் ஆணைக்குழு கூட்டங்களில் பங்கேற்று எடுக்கப்படும் முடிவுகள் ஆலோசனைகள் தொடர்பில் முரண்பாடான கருத்துக்களை தெரிவித்து வருகிறார். ஆனால் இறுதியில் அவருக்கு ஆதரவு அளித்து விட்டு  வெளியே விமர்சித்து வருகின்றார். இந்த விமர்சனங்களால் ஆணைக்குழு பெரும் சவாலுக்கு முகம் கொடுக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

அவரது  இவ்வாறான செயற்பாடுகள் தொடருமானால் அது பெரும் பிரச்சினைக்கு வழி வகுக்கலாம் என அச்சமடைகின்றேம். 
ஆணைக்குழுவின் செயற்பாடுகள் ஸ்தம்பிதம் அடையும் அச்சம் கூட எம்மிடம் காணப்படுகின்றது என தெரிவித்த ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய, இது தொடர்பில் அரசியலமைப்பு பேரவைக்கு தெளிவுபடுத்தி கடிதம் எழுத தீர்மானித்துள்ளேன்.

ஆணைக்குழுவின் எந்த ஒரு நபருக்கு எதிராகவும் அதன் தவிசாளர் என்ற ரீதியில் எந்த நடவடிக்கையையும் எடுக்கும் அதிகாரம் எனக்கு கிடையாது. ஆணைக்குழுவை நியமித்து அரசியலமைப்பு பேரவைக்கு தெரிவிக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கமையவே இந்த கடிதத்தை எழுத தீர்மானித்துள்ளேன். எதிர்வரும் 25 ஆம் திகதி கூடும் ஆணைக் குழுவின் முக்கிய கூட்டத்தை அடுத்து இந்த முறைப்பாட்டை அரசியலமைப்பு பேரவைக்கு தெரிவித்திருப்பதாகவும் அது தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிவிக்க இருப்பதாகவும் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தினகரனுக்கு  தெரிவித்தார்.

இந்த முறைப்பாடு தொடர்பில் அரசியலமைப்பு பேரவை உரிய நடவடிக்கை எடுக்கத் தவறும் ஆனால் நான் தொடர்ந்தும் ஆணைக் குழுவில் அங்கம் வகிப்பதாக இல்லையா என்பது குறித்து தீர்மானிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

(எம்.ஏ.எம். நிலாம்)


Add new comment

Or log in with...