யுவதி பொலிஸாரால் மீட்பு
இன்று காலை 10 மணியளவில் தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல்கொத்மலை நீர்த்தேக்கத்துக்குள் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த 23 வயதான பெண்ணை காப்பாற்றச் சென்ற ஆப்தீன் றிஸ்வான் எனும் 32 வயதான நபர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
தலவாக்கலை பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய யுவதி ஒருவர் தலவாக்கலை புகையிரதக் கடவை பாலத்தில் இருந்து மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தில் குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.
இதனை கண்ட அவ்வழியாகச் சென்ற றிஸ்வான் எனும் நபரொருவர், யுவதியை காப்பாற்றும் நோக்கில் நீர்த்தேக்கத்துக்குள் பாய்ந்து நீந்திச் சென்றவர், குறித்த யுவதியை காப்பாற்ற முயன்ற போது ஏற்பட்ட போராட்டத்தில் அவர் நீருக்குள் மூழ்கியுள்ளார்.
இந்நிலையில் அப்பகுதியில் ரோந்து நடவடிக்கையில் இருந்த தலவாக்கலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ருவன் பெனாண்டோ உள்ளிட்ட பொலிஸ் குழுவினர், நீரில் தத்தளித்தக் கொண்டிருந்த குறித்த பெண்ணை யுவதியை காப்பாற்றியுள்ளனர்.
எனினும், குறித்த யுவதியை காப்பாற்ற குதித்த நபர் நீரினுள் காணாமல் போன நிலையில், இரண்டு மணித்தியாலங்கள் தேடுதலின் பின் குறித்த நபரின் சடலம் இன்று மாலை 5.30 மணியளவில் மீட்கப்பட்டது
இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஆப்தீன் றிஸ்வான் (32) என்பவரே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்தவராவார்.
பொலிஸாரும், கடற்படையின் சுழியோடிகளும், இராணுவத்தினரும் இணைந்து அவரை தேடும் பணியை முன்னெடுத்துள்ளனர்.
காப்பாற்றப்பட்ட யுவதி லிந்துலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தேசிய மனநல உதவி இலக்கம் 1926
இலங்கை சுமித்ரயோ 011 2696666
CCC line 1333
Add new comment