கட்டுநாயக்க துப்பாக்கிச் சூடு சம்பவம்; இருவர் கைது

கட்டுநாயக்க பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவமொன்றுடன்  தொடர்புடைய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 15ஆம் திகதி, கட்டுநாயக்க பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹீனட்டியன, மினுவாங்கொடை பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்தில் 38 வயதுடைய ஒருவர் உயிரிழந்தார்.

குறித்த நபர், கடையொன்றுக்குச் சென்று விட்டு வீடு திரும்புகையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானதை தொடர்ந்து, நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக கட்டுநாயக்க பொலிஸாரும், மேல் மாகாண புலனாய்வு பிரிவினரும் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.

குறித்த விசாரணைகளுக்கு அமைய, இச்சந்தேகநபர்கள் இருவரும் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட உள்ளூர் துப்பாக்கியுடன் கொவின்ன பிரதேசத்தில் நேற்று (20)  மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஹீனட்டியன, மினுவாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 36, 56 வயதுகளையுடைய சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு இடையில் காணப்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக இக்கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது என, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கட்டுநாயக்க பொலிஸார் விரிவான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 


Add new comment

Or log in with...