முன்னாள் அமைச்சர் ராஜித சேனரத்னவுக்கு வழங்கப்பட்ட பிணை உத்தரவு இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
வெள்ளை வேன் பத்திரிகையாளர் சந்திப்பு தொடர்பான வழக்கு தொடர்பில், கடந்த டிசம்பர் 30ஆம் திகதி கொழும்பு பிரதான நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட குறித்த பிணை உத்தரவை, கொழும்பு உயர் நீதிமன்றம் இவ்வாறு இரத்துச் செய்துள்ளது.
முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு கடந்த டிசம்பர் 24ஆம் திகதி பிடியாணை வழங்கப்பட்ட நிலையில் அவர் டிசம்பர் 26ஆம் திகதி லங்கா ஹொஸ்பிட்டல் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், டிசம்பர் 27ஆம் திகதி கைது செய்யப்பட்டதோடு, டிசம்பர் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிடப்பட்டார்.
வைத்தியசாலையில் தொடர்ந்தும் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு, டிசம்பர் 30ஆம் திகதி, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் சேனரத்னவுக்கு பிணை வழங்க உத்தரவிட்டது.
ஆயினும், குறித்த நீதவான் நீதிமன்றத்தின் பிணை உத்தரவை எதிர்த்து, சட்டமா அதிபரினால் கடந்த ஜனவரி 08ஆம் திகதி மீளாய்வு மனு விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தற்போது கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்படுவார் என சட்ட மாஅதிபரின் ஒருங்கிணைப்பாளர் நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
Add new comment