பயணிகள் விமான சேவை இடைநிறுத்தம் மே 31 வரை நீடிப்பு

பயணிகள் விமான சேவை இடைநிறுத்தம் மே 31 வரை நீடிப்பு-Temp Suspension of Scheduled Flights Extended to 31st May 2020-SriLankan

குறிப்பிட்ட சில நகரங்களுக்கு மாத்திரம் பயணிகள் சேவை

ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தனது நாளாந்த பயணிகள் விமான சேவைகளின் தற்காலிகமாக இடைநிறுத்தத்தை எதிர்வரும் மே 31 வரை நீடிப்பதாக அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக தாம் விமான சேவைகளை மேற்கொள்ளும் உலகளாவிய வலையமைப்பிலுள்ள நாடுகள் விதித்துள்ள பயணக் கட்டுப்பாடுகள், தொடர்ந்தும் நடைமுறையில் இருப்பதால், இந்நடவடிக்கையை எடுத்துள்ளதாக ஶ்ரீலங்கன் விமான சேவை அறிவித்துள்ளது.

இந்த இடைநிறுத்தமானது மே 15ஆம் திகதி வரை நீடிக்கப்படுவதாக அந்நிறுவனம் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் அது மேலும் நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆயினும் நாடுகளுக்கிடையேயான சில பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, உலகில் பொருளாதார நடவடிக்கைகள் மீள ஆரம்பமாவதைக் கருத்தில் கொண்டு ஶ்ரீலங்கன் விமான சேவை இன்று (13) முதல் லண்டன், டோக்கியோ (நரிட்டா), மெல்போர்ன், ஹொங்கொங்கிற்கு பயணிகள் மற்றும் சரக்கு ஆகிய இரண்டு வகை விமான சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்திருந்தது.

அத்துடன் சரக்கு விமான சேவைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

அதற்கமைய, அந்தந்த நாட்டு பயண ஆலோசனைகளின் கீழ் பயணிக்க தகுதியுள்ள பயணிகளுக்கு, லண்டன், டோக்கியோ (நரிட்டா), மெல்பேர்ன், ஹொங்கொங் உள்ளிட்ட நகரங்களுக்கான சேவைகளை வழங்கவுள்ளதாக விமான சேவை அறிவித்துள்ளது.

அரசாங்கம் மற்றும் தொழில்துறைகளுக்கான மருத்துவ பொருட்கள், உபகரணங்கள், அத்தியாவசிய பொருட்கள் ஆகியவற்றுக்கான சரக்கு விமான சேவைகளை ஶ்ரீ லங்கன் விமான சேவை மேற்கொண்டுள்ளதோடு இது நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலில் அந்நியச் செலாவணியை பெருமளவில் பெற்றுத் தரும் நடவடிக்கையாகும் என தெரிவித்துள்ளது.

அத்துடன் உதவி தேவைப்படுகின்ற இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்காக, ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விசேட பயணிகள் விமானங்களை தேவைக்கு அமைய இயக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு, பயணிகள் தங்களது பயண முகவர்கள், அருகிலுள்ள ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அலுவலகம் அல்லது ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் உலகளாவிய தொடர்பு மையத்தை +94117771979 எனும் தொலைபேசி வழியாக தொடர்பு கொள்ளுமாறு ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.


Add new comment

Or log in with...