சுற்றுலாத் துறையில் COVID-19 இன் தாக்கம் காரணமாக, 2021 ஆம் ஆண்டிற்கான வழிகாட்டி அனுமதிப்பத்திர கட்டணத்தை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் கிமர்லி பெனாண்டோ இவ்வறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதற்கமைய, நிவாரண நடவடிக்கையாக, தேசிய ரீதியிலான, சாரதி வகை, பிரதேச ரீதியிலான மற்றும் குறித்த இடத்திற்கான வழிகாட்டிகள் ஆகிய நான்கு பிரிவுகளில் அமைந்த வழிகாட்டி அனுமதிப்பத்திரங்களுக்கான 2021 ஆம் ஆண்டிற்கான வருடாந்த கட்டணத்தை தள்ளுபடி செய்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது குறைந்தபட்சம் 2019 ஆம் ஆண்டு வரை தமது அனுமதிப்பத்திரங்களை புதுப்பித்துள்ள வழிகாட்டிகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு வருடத்திற்கும் மேலாக அனுமதிப்பத்திரத்தை புதுப்பிக்காத வழிகாட்டிகள், அதற்கு முந்தைய ஆண்டுகளுக்கான கட்டணத்தை செலுத்துவதன் மூலம் இந்நிவாரணத்தை பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்நிவாரண நடவடிக்கையை நீடிப்பது தொடர்பான முடிவு எதிர்வரும் 2021 இல் மதிப்பாய்வு செய்யப்பட்டு அது தொடர்பில் முடிவெடுக்கப்படும் என கிமர்லி பெனாண்டோ தெரிவித்துள்ளார்.
Add new comment