ஹொரவபொத்தானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரிதிகஹவெவ பகுதியில் பரணிலிருந்து வீழ்ந்து வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் ஹொரவ்பொத்தானை, மொரகெவ, கொடிகஹவெவ பகுதியைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான எல்.பி. சோமபால (70) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது, தந்தையும், மகனும் வயல் காவலுக்காக சென்றுகொண்டிருந்தபோது காட்டு யானைகள் தாம் இருந்த இடத்துக்கு அருகில் வந்து கொண்டிருந்தபோது யானையைக் கண்டு பயந்து மரத்துக்கு மேலே உள்ள பரணில் ஏறுவதற்கு முற்பட்டபோது தந்தை பரணில் இருந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளதாகவும் அவரது மகன் பொலிஸ் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் தற்பொழுது ஹொரவபொத்தானை பிரதேச வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சடலத்தை பார்வையிடுவதற்காக நீதவான் வருகை தர உள்ளதாகவும் அவர் பார்வையிட்டதையடுத்து சட்ட வைத்திய பரிசோதனை நிறைவடைந்த பின்னர் உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
தற்பொழுது காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்து வருவதாகவும் விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
(ரொட்டவெவ குறூப் நிருபர் - அப்துல்சலாம் யாசீம்)
Add new comment