சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்கும் விதம்

சிவராத்திரிக்கு முதல் நாள் ஒரு வேளை மட்டுமே உணவு உண்ண  வேண்டும். சிவராத்திரி அன்று அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்டு சூரிய  உதயத்தின் போது காலையில் வீட்டில் செய்ய வேண்டிய பூஜையை முடிக்க  வேண்டும்.

அதன் பின் சிவன் கோவிலுக்குப் போய்  முறைப்படி தரிசனம் செய்ய வேண்டும். பூஜை செய்யும் இடத்தை மலர்களால்  அலங்கரித்து நண்பகலில் குளித்து மாலையில் சிவார்ச்சனைக்கு உரிய  பொருட்களோடு சிவன் கோவிலில் வழிபாடு நடத்தலாம். மாலையில் மீண்டும்  குளித்து வீட்டில் சிவபூஜை செய்ய வேண்டும். வீட்டிலேயே இரவின் நான்கு  ஜாமங்களிலும் முறைப்படிப் பூஜை செய்தலும் நலம். பூஜையில்  சிவனுக்குப்பிடித்தமான வில்வ இலைகளைக் கொண்டு பூஜிப்பது கூடுதல் சிறப்பு. 

மகா சிவராத்திரி விரதம் மேற்கொள்பவர்கள் கோபத்தைக்  கட்டுப்படுத்துவதுடன், பிரம்மச்சரியத்தைக் கடைபிடிக்க வேண்டும்.  சிந்தையில் அமைதியுடன் சிவ புராணத்தை பாடிக் கொண்டிருக்க வேண்டும்.  பற்றற்று இருப்பதுடன் பேராசைகளைக் கைவிட்டு பிறருக்குத் தீங்கிழைக்காமல்  இருத்தல் வேண்டும். 

மாலையில் குளித்து உலர்ந்த ஆடையணிந்து நெற்றியில்  திருவெண்ணீறு அணிந்து, கையில் உத்திராட்ச மாலையுடன் வீடுகளில் சிவ பூஜை  செய்தோ அல்லது கோயில்களுக்குச் சென்றோ சிவனை வழிபடுதல் வேண்டும்.  கோயில்களிலும் சிவபூஜை செய்யலாம். ஐந்தெழுத்து மந்திரமான சிவாய நம என்ற  சொல்லை உச்சரித்து பூஜிக்க வேண்டும். கலச பூஜையுடன் லிங்கத்தை வைத்தும்  பூஜை செய்யலாம். பூக்கள் மற்றும் அபிஷேகப் பொருட்களை கோயில்களுக்கு  வாங்கிக் கொடுத்தல் நலம்.  

பின்னர் சிவபெருமானின் வெவ்வேறு பெயர்களான பவ, சர்வ, ஈசான,  பசுபதி, உக்ர, ருத்ர, பீமா மற்றும் மகாதேவா என்று கூறி பூஜிக்க வேண்டும்.  சிவ பெருமானின் சகஸ்ர நாமத்தை சொல்லி பிரார்த்திக்கலாம். அன்றையதினம்  இரவில் நான்கு ஜாமங்களிலும் தூங்காமல் பூஜை செய்து, மறுநாள்  விடியற்காலையில் நீராடி, காலை அனுஷ்டானத்துடன் உச்சிக்கால  அனுஷ்டானத்தையும் அப்போதே முடிக்க வேண்டும். அதன் பின் உடைகள் மற்றும்  உணவினை அந்தணர்க்கு தானமாக அளித்து விரதத்தை நிறைவு செய்யும் விதமாக உணவு  உண்ண வேண்டும். சிவராத்திரி நாளில் முழுவதும் உபவாசம்

பலன்கள் 

புராணங்களில் சொல்லப்பட்ட மற்றைய பல விரதங்களை நெடுங்காலம்  கடை பிடிப்பது, நூறு அசுவமேத யாகம் செய்வது, பல முறை கங்கா ஸ்நானம்  செய்வது ஆகிய அனைத்தையும் மேற்கொண்டாலும் ஒரு சிவராத்திரி விரதத்தை  அனுஷ்டிப்பதற்கு ஈடாகாது.  முற்பிறவிகளில் செய்த பாவம், இப்பிறவியில் தெரிந்து,  தெரியாமல் செய்த தீமைகளின் வெம்மை நம்மைச் சூழாதிருக்க ருத்ரனின்  திருநாமத்தை அன்று இரவு முழுவதும் உச்சரித்தால் போதும். 

அம்பிகையால் உலக நலன்கருதி நடத்தப்பட்ட வழிபாடு இது.  பிறருக்காகவும், இந்த உலகத்தினைச் சேர்ந்த அனைவரும் நலமுற்று வாழ ஏற்படும்  துன்பங்களையும் தத்தமது விருப்பங்களையும் தேவைகளையும் (உணவு, தூக்கம்)  குறைத்துக்கொள்வதின் வெளிப்பாடு தான் இந்த மகா சிவராத்திரி ஆகும்.


Add new comment

Or log in with...