கிழக்கிலங்கையில் செங்கல் உற்பத்திக்கு புகழ் பெற்ற இடமாக அம்பாறை மாவட்டத்திலுள்ள நெய்னாகாடு கிராமம் காணப்படுகின்றது. இப்பிரதேச மக்களின் வாழ்வாதாரத் தொழிலாகவும் இத்தொழிலே காணப்படுகின்றது.
இதேநேரம் மறுபுறத்தில் இப்பிரதேச சிறுவர்கள் முதல் வயோதிபர்கள் வரை இத்தொழிலால் சுவாச நோய்க்கு உள்ளாகி வருகின்றனர். அரிசி ஆலைகளிலிருந்து கழிவாகப் பெறப்படும் உமியை செங்கற்களின் சூளையில் எரிபொருளாக இத்தொழிலாளர்கள் பயன்படுத்துகின்றனர். உமி எரிந்து முடிந்து சாம்பலானதும் காற்றில் பறந்து துகள்களாக வெளியேறுகின்றது. இத்துகள்களை சிறுவர்கள் முதல் வயோதிபர்கள் வரை சுவாசிப்பதன் மூலம் சுவாச நோய்க்கு உள்ளாகின்றனர்.
இது குறித்து நேரடியாக நெய்னாகாடு கிராமத்துக்குச் சென்று அங்குள்ள பொதுமக்களைச் சந்தித்துப் பேசிய போது தங்களது துன்பங்களை அவர்கள் எம்முடன் பகிர்ந்து கொண்டனர்.
சம்மாந்துறைக்கு தெற்காகச் செல்லும் மல்கம்பிட்டி பாதை வழியாகச் சென்றால் சுமார் 12கிலோமீற்றர் தூரத்தில் நெய்னாகாடு கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்தைச் சுற்றி பச்சைப் பசேலென்று நெல்வயல்கள் காணப்படுகின்றன. பிரதான பாதையிலிருந்து கரடு முரடான, குண்டும் குழியுமான பாதை வழியே சென்றால் நெய்னாகாடு உள்ளது. இங்குள்ள பாதைகள் மிகவும் பைழமை வாய்ந்த, போக்குவரத்துக்கு பொருத்தமற்ற மண் பாதைகளாகவே காணப்படுகின்றன. இப்பாதைகள் இக்கிராமம் உருவான காலம் தொடக்கம் புனரமைப்புச் செய்யப்படவில்லை என பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
இக்கிராமத்தில் கடந்த 30வருடங்களாக வசித்து வரும் ஹமீது என்பவர் கருத்துத் தெரிவிக்கையில், "நான் இக்கிராமத்தில் திருமணம் செய்து 30வருடங்களாக வசித்து வருகின்றேன். இப்பிரதேசத்தில் எந்தவித அபிவிருத்தியும் நடைபெறுவதில்லை. தேர்தல் காலங்களில் மட்டும் இங்கு வாக்குக் கேட்க அரசியல்வாதிகள் வருவார்கள், தேர்தல் முடிந்தால் சென்று விடுவார்கள். இங்குள்ள வீதிகளின் ஒவ்வொரு வளவிலும் கற்சூளைகள் காணப்படுகின்றன. இதனால் வெளியாகும் சாம்பலைத்தான் நாங்கள் நாளாந்தம் சுவாசிக்கின்றோம். இங்குள்ள பாதை வழியே வாகனம் சென்றால் புழுதி வானத்தை எட்டும் அளவிற்கு கிளம்பும். சில நிமிடங்களுக்கு பாதையே தெரியாமல் இருக்கும்.
இங்குள்ள பாதைகள் கொங்கிறீட் இட்டு திருத்தப்படுமானால் கற்சூளைகளை வேறு இடத்திற்கு கொண்டு செல்ல முடியும். பாதை ஒழுங்கின்றி காணப்படுவதால் களிமண்ணைக் கொண்டு வெட்டப்படும் கற்களை அவரவர் வளவிற்குள்ளேயே சூளையிட வேண்டியுள்ளது. இதனால் அருகிலுள்ள வீடுகளில் துகள்கள் செல்கின்றன. அவ்வீட்டில் உள்ளவர்கள் தினமும் உமி மற்றும் உமிச்சாம்பலுடன் கூடிய காற்றைத்தான் சுவாசிக்கின்றனர். இங்குள்ள கல்வாடிகளில் அதிகமானவை அண்மையில் உள்ள சம்மாந்துறை மற்றும் சாய்ந்தமருதுப் பிரதேசங்களில் உள்ளவர்களின் கல்வாடிகளாக உள்ளன. நாங்கள் கூலிக்காக வேலை செய்கின்றோம். களிமண்ணைக் கொண்டு 3000செங்கற்கள் வெட்டிக் கொடுத்தால் ஐயாயிரம் ரூபா கிடைக்கும். இதற்காக மூன்று நாட்கள் வெயிலில் கடின வேலை செய்ய வேண்டும்" எனக் கூறினார்.
இப்பிரதேசத்தில் வசிக்கும் நஜீபா என்ற பெண் கருத்துத் தெரிவிக்கையில், "இரவு வேளைகளில் தெருவிளக்குகள் இன்றி இப்பிரதேசம் இருளடைந்து காணப்படுகின்றது. இக்கிராமத்தைச் சுற்றி வயல்வெளிகள் காணப்படுவதால் யானைகளின் தொல்லைகள் அதிகம் காணப்படுகின்றது. எங்களது வீட்டின் கதவைத் திறந்தால் வாசலில் யானை நிற்கும். இங்கு யானை தாக்கி பலர் உயிரிழந்துள்ளனர். தெருவிளக்குகள் இல்லை. இருளடைந்த பாதை வழியே இரவில் போக்குவரத்துச் செய்ய முடியாது. இரவில் மக்களுக்கு நோய் ஏற்பட்டால் சம்மாந்துறைக்குச் செல்ல வேண்டியுள்ளது. இதேநேரம் பாதையை யானைகள் மறித்து நிற்கும். வயல்களில் வேளாண்மை செய்யப்படும் போது மட்டும் யானைகளின் அட்டகாசம் சற்று குறைவாகக் காணப்படும்.
தெருவெல்லாம் புழுதி நிறைந்திருக்கும். மழைக் காலம் சேறு நிறைந்த பாதையாகக் காணப்படும். எங்களது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப முடியவில்லை. இவ்வீதிகளால் செல்லும் எங்களது பிள்ளைகளின் பாடசாலைச் சீருடைகள் சேறுபடிந்து காணப்படுகின்றன. இதேநேரம் இப்பாதை வழியே அடிக்கடி செங்கல் ஏற்றுவதற்காக வரும் கனரக லொறிகளால் பாதைகள் மிக மோசமாக சேதமடைந்து காணப்படுகின்றன. இங்கு நிலவும் அதிக வரட்சியுடன், செங்கல் சூளைகளின் வெப்பமும் கலந்து தோல்களில் சுருக்கமும் ஒருவகை எரிவும் ஏற்படுகின்றது. எங்களது சிறு பிள்ளைகள் சுவாசிப்பதில் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர்" எனத் தெரிவித்தார்.
இப்பிரதேசத்தில் வசிக்கும் எஸ்.சித்ரா என்ற பெண் கருத்துத் தெரிவிக்கையில், "நான் எனது கணவரான ரமேஷுடன் தொழில் தேடி, மூதூரிலிருந்து இங்கு வந்து 12வருடங்களாக வாழ்கின்றோம். இங்கு தமிழ், முஸ்லிம் மக்கள் மிகவும் ஒற்றுமையாக தொழிலில் ஈடுபடுகின்றனர். மிகவும் கஷ்டப்பட்டே செங்கல் தொழிலைச் செய்கின்றோம். 3000செங்கற்களை வெட்டிக் கொடுத்தால் 5000ருபா கொடுக்கின்றார்கள். தொழிலுக்கு கஷ்டம் இல்லை என்றாலும் இங்கு சுகாதார வசதிகள் இல்லை. தூசும், வெப்பமும், துகள்களும் நிறைந்த சுற்றாடலே காணப்படுகின்றது. இங்கு மக்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லை. பெரும்பாலான மக்கள் குடிசைகளிலேயே வசிக்கின்றனர். இக்குடிசைகள் அடிக்கடி யானைகளின் தாக்கத்திற்கு உள்ளாகின்றன. இரவு வேளைகளில் வெளியே செல்ல முடியாது. இரவு நேரங்களில் தெருவிளக்குகள் இன்றி பாதை இருளடைந்து காணப்படுவதால் எங்கெங்கு யானைகள் நிற்கின்றது எனத் தெரியாது. இக்கிராமத்தைச் சுற்றி வயல்வெளிகள் காணப்படுவதால் யானைகளின் ஊடுருவல் அதிகமாகக் காணப்படுகின்றது. இதனால் இரவு ஏழு மணியானால் நாங்கள் வீட்டை விட்டு வெளியேறுவதில்லை" எனக் குறிப்பிட்டார்.
இக்கிராமத்தைப் பற்றி இங்குள்ள பலர் தெரிவித்த கருத்துக்களை நோக்கும் போது, இக்கிராம மக்கள் அடிப்படை வசதிகள் இன்றி, சுகாதார சீர்கேட்டிலேயே வசிக்கின்றனர் எனத் தெரிய வருகின்றது. கடந்த 1990இலும் அதன் பின்னர் ஏற்பட்ட வன்செயல்களின் போதும் இங்குள்ள மக்கள் முற்றாக இடம்பெயர்ந்தனர். ஆரம்பத்தில் இங்கு அதிக குடும்பங்கள் வசித்து வந்துள்ளன. 1990இல் ஏற்பட்ட வன்செயலில் இடம்பெயர்ந்தவர்களில் அதிகமானோர் இங்கு மீளக் குடியமரவில்லை. இங்குள்ள பிரதான தொழிலான செங்கல் தொழிலை எதிர்பார்த்தே பல குடும்பங்கள் மீளக்குடியேறியுள்ளன.
இக்கிராமத்தில் முஸ்லிம்களும், தமிழர்களும் ஒற்றுமையாக வசிப்பதைக் காணக் கூடியதாக இருந்தது. இவர்கள் இக்கிராமத்தின் ஆரம்பகாலக் குடியேறிகளாக காணப்படுகின்றனர். பலர் தொழிலுக்காக புதிதாக குறியேறியவர்களாக காணப்படுகின்றனர். பெரும்பாலானவர்கள் சம்மாந்துறை, சாய்ந்தமருது, மற்றும் கல்முனை போன்ற பிரதேசங்களில் இருந்து குடியேறியவர்களாக உள்ளனர்.
இங்குள்ள நிலம் துகள்கள் படிந்த கருமை நிலங்களாக காணப்படுகின்றது. செங்கல் சூளைகளின் துகள் பரவியதால் மண் இவ்வாறு காணப்படுவதாக பிரதேசவாசி ஒருவர் குறிப்பிட்டார். இப்பிரதேசம் ஒரு மேட்டு நிலமாக காணப்படுவதால் சிறு பயிரினங்கள் மற்றும் உப உணவுப் பயிர்களை செய்கை பண்ண முடியாத நிலை காணப்படுகின்றது.
இக்கிராமத்தை ஒரு தொழிற்பேட்டையாகவே வெளியூர்களைச் சேர்ந்தவர்கள் பயன்படுத்துவதாக பிரதேசவாசி ஒருவர் தெரிவித்தார். அபிவிருத்தி என்பது இக்கிராமத்தில் காண முடியாத ஒன்றாக உள்ளது. சுமார் 50 வருடங்களைத் தாண்டிய மண் பாதைகளே இங்கு அதிகம் காணப்படுகின்றன. எந்தப் பாதையைப் பார்த்தாலும் குண்டும் குழியுமாகவே காணப்படுகின்றது. செங்கல் ஏற்றுவதற்காக வரும் லொறிகளினால் பாதையில் காணப்படும் புழுதி விண்ணைத் தொடுமளவிற்கு காணப்படுகின்றது. துகள்களின் தாக்கத்தால் முன்னால் செல்லும் வாகனத்தைத் தொடர்ந்து பின்னால் வாகனங்கள் செல்ல முடியாதுள்ளது.
கடந்த காலங்களில் இடப்பரப்புக் கூடியதாக காணப்பட்ட இக்கிராமம் கழிமண் அகழ்வு நடவடிக்கையால் பரப்பளவில் குறைந்து கொண்டு வருகின்றது. வெளிப் பிரதேசங்களில் உள்ளவர்கள் இக்கிராமத்தில் உள்ளவர்களுடைய காணிகளை விலைக்கு வாங்கி, மண் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டு, இம்மண்களை அதிக விலைக்கு விற்பதோடு இக்காணிகளை தாழ்நிலமாக மாற்றுகின்றனர். குறைந்த விலைக்கு வாங்கப்படும் காணிகள் மண் அகழ்வின் பின்னர் நெற்பயிர்ச் செய்கை நிலமாக மாற்றப்பட்டு அதிக பெறுமதியுள்ள நிலமாக விற்பனை செய்யப்படுகின்றது. காலக்கிரமத்தில் இக்கிராமம் ஒரு தாழ்நிலமாக மாறக் கூடிய ஆபத்து காணப்படுகின்றது. சுமார் 5இலட்சம் கொடுத்து வாங்கப்படும் ஒரு ஏக்கர் நிலம் மண் அகழ்வின் பின் தாழ்நிலமாக்கப்பட்டு 50இலட்சம் வரை விற்பனை செய்யப்படுகின்றது.
இக்கிராமத்தில் அடிப்படை வசதிகள் இன்றி, குறைந்த விலைக்கு தங்களது நிலங்களை விற்றுவிட்டு வெளியேறிய பின்னர், அந்நிலம் மண் அகழ்வு செய்யப்படுகின்றது.
ஒரு கிராமம் அழிந்து வருவதை இப்பிரதேச மக்களும், அரசியல்வாதிகளும் உணரவில்லை. இருக்கின்ற மக்களை தக்க வைத்து அவர்களுக்கான அடிப்படை வசதிகளான வைத்திய வசதி, கல்வி, சிறந்த போக்குவரத்து, சுத்தமான குடிநீர், வீட்டு வசதி என்பவற்றைப் பெற்றுக் கொடுப்பதோடு பிரதேச மக்களின் சுகாதாரத்திற்கு தீங்காக அமையும் கற்சூளைகளை கிராமத்திற்கு வெளியில் அமைத்து, இக்கிராம மக்களை மனிதாபிமானத்துடன் அணுகி பாதுகாக்க வேண்டும். வெறுமனே இக்கிராமத்தை தேர்தல் வாக்குகளுக்காக மட்டும் பயன்படுத்தாது அம்மக்களுடைய தேவைகளை நிறைவு செய்து கொடுப்பது காலத்தின் தேவையாக உள்ளது.
எம். முஸ்தபா
(நாவிதன்வெளி தினகரன் நிருபர்)
Add new comment