வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 10,000 கல் வீடுகள் நிர்மாணம்

4,750 வீடுகள் விரைவில் பூர்த்தி 

தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரங்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சர் என்ற வகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் முன்னெடுக்கப்பட்ட 10,000 கல் வீடுகளை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்குவதற்கான நிகழ்ச்சித்திட்டம் அரச நிதியுதவியுடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.  

10,000 வீடுகளில் 4,750 வீடுகள் ஜனவரியில் ஆரம்பிக்கப்பட்டு முடிவுறும் தறுவாயில் உள்ளன. முதற்கட்டமாக 4,750 வீடுகளில், யாழ் மாவட்டத்தில் 1500 வீடுகளும் (புதிதாக விடுவிக்கப்பட்ட பிரதேசங்கள் உள்ளடங்கலாக), கிளிநொச்சியில் 670 வீடுகளும், முல்லைத்தீவில் 630 வீடுகளும் வவுனியாவில் 450 வீடுகளும்; மட்டக்களப்பில் 625 வீடுகளும், திருகோணமலையில் 400 வீடுகளும் மன்னாரில் 350 வீடுகளும் அம்பாறையில் 125 வீடுகளும் ஒதுக்கப்பட்டுள்ளன இவ்வீடுகள் அனைத்தும் முடிவுறும் நிலையிலுள்ளதாக தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரங்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடமாகாண அபிவிருத்தி, மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சின் செயலாளர் வே. சிவஞானசோதி தெரிவித்தார்.  

முடிவுறுத்தப்பட்ட வீடுகளில் சில வீடுகள் யாழ்ப்பாண மாவட்டத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால்  பயனாளிகளிடம் வைபவ ரீதியாக கையளிக்கப்பட்டன.  

இரண்டாம் கட்டமான மிகுதி 5,250வீடுகளில் யாழ் மாவட்டத்தில் 1,065 வீடுகளும் (புதிதாக விடுவிக்கப்பட்ட பிரதேசங்கள் உள்ளடங்கலாக), கிளிநொச்சியில் 855 வீடுகளும், முல்லைத்தீவில் 695 வீடுகளும், மன்னாரில் 850 வீடுகளும், வவுனியாவில் 550 வீடுகளும், திருகோணமலையில் 600 வீடுகளும் ஒதுக்கப்பட்டுள்ளதோடு இவை ஒக்டோபர் மாத இறுதியில் முடிவுறுத்தப்படும் என அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி மேலும் தெரிவித்தார்.  

மேலும், கிழக்கு மாகாணத்திற்கான 7,000சிறப்பு வீட்டுத்திட்டத்தில் முதல் கட்டமாக 1,000 புதிய தொழில்நுட்ப வீடுகளும் முன்னெடுக்கப்படவுள்ளன. ஒரு வீட்டுக்கான கிரயம் ரூபா 1மில்லியனாகும்.  

2019 ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் 10,000 வீடுகளை நிர்மாணிப்பதற்காக ரூபா 10 பில்லியன் இவ் அமைச்சிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வீடுகள் 550 சதுரகிலோ மீற்றர்களாக காணப்படுவதுடன் இரண்டு படுக்கை அறைகள், குசினி மற்றும் ஓடுகளிலான கூரையைக் கொண்டதாக காணப்படும். மேலும் பயனாளிகளினால் அமைக்கப்படுகின்ற வீடாக காணப்படுவதால் பயனாளிகள் மற்றும் அப்பிரதேசத்திலுள்ள மக்கள் வேலை வாய்ப்புக்களைப்பெறக் கூடியதாக இருக்கும். மேலும் நிதியானது மாவட்டத்தினுள் சுழற்சியடைவதால் அம்மாவட்டங்கள் பயன்பெறக் கூடியதாக காணப்படுகின்றது என தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரங்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு மாகாண அபிவிருத்தி, மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சின் செயலாளர் வே. சிவஞானசோதி மேலும் தெரிவித்தார். 


Add new comment

Or log in with...