கிரிக்கெட் சபை தொடர்பில் பாராளுமன்றத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானங்களின் அடிப்படையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இலங்கை கிரிக்கெட் சபைக்கு எதிராக தடை விதித்தால், அதன் பொறுப்பை பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஏற்க நேரும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற ஊழல் மிக்க இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் உட்பட நிர்வாக சபையை நீக்குதல் மற்றும் புதிய சட்ட கட்டமைப்பை சட்டமூலம் ஊடாக அனுமதிக்கும் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை கிரிக்கெட் சபையின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்காக நான்கு பேர் கொண்ட அமைச்சரவை உபகுழு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த அமைச்சரவை உபகுழுவின் நோக்கம் தேசிய அணியையோ அல்லது நிர்வாகத்தையோ தேர்ந்தெடுப்பதல்ல. கிரிக்கெட் சபைக்கு புதிய யாப்பை உருவாக்கி அதனை சிறந்த முறையில் முன்னெடுத்து செல்வதே அதன் செயற்பாடு.
இலங்கை கிரிக்கெட் சபை தொடர்பில் சபையில் பல்வேறு குற்றச்ச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஊழல் மிக்க இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் உட்பட நிர்வாக சபையை நீக்குதல் மற்றும் கட்டமைப் பொன்றை சட்டம் மூலம் அனுமதிக்கும் பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானங்களின் அடிப்படையில் சர்வதேச கிரிக்கெட் சபை இலங்கை கிரிக்கெட் சபைக்கு தடை விதிக்க முடிவு செய்தால் அதற்கு பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் பொறுப்புக் கூற வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
லோரன்ஸ் செல்வநாயகம்