புத் 63 இல. 10

விரோதி வருடம் மாசி மாதம் 23ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1431 ரபியுல் அவ்வல் பிறை 20

SUNDAY MARCH 07, 2010

 
.
தூக்கமும் கண்களை தழுவட்டுமே...

தூக்கமும் கண்களை தழுவட்டுமே...

சில வருடங்களுக்கு முன்னர் தூக்கம் பற்றிய பாடல் வெளிவந்து சந்து பொந்தெல்லாம் ஒலித்துக் கொண்டேயிருந்தது. தூங்காதே தம்பி தூங்காதே... என்பதே அந்தப் பாடால் மனிதன் தூங்கியதால் ஏற்பட்ட விளைவுகளை சித்திரிக்கின்ற ஒருபாடல் பின்னாலில் இப்பெயரில் ஒரு திரைப்படமும் வெளிவந்தது. ‘தூக்கமும் கண்களை தழுவட்டுமே’ என்றொரு பாடல். இவ்வாறெல்லாம் தூக்கத்தைப் பற்றிய பாடல்கள் வெளிவந்துள்ளன. தூக்கம் ஒரு சிறு மரணம் என்றுகூட கூறுகின்ற நிலைக்கும் அப்பால் தூக்கம் பற்றி நாம் படித்துச் சுவைத்தவைகளை உங்களிடம் பகிர்ந்துகொள்ளலாம் அல்லவா!

தூக்கம் என்பதற்கான சரியானதொரு விளக்கம் தெளிவாக கிடைக்கவில்லை என்றாலும் உளவியலாளர்கள், மருத்துவ மேதைகள், அறிவியலாளர்கள் போன்றோர் தூக்கம் என்பதற்காகன விளக்கங்களை பல்வேறு விதங்களில் தந்துள்ளனர். உளவியல் நிபுணர் ஜோன் ஸ்பென் பெக் என்பவர் ‘கள்ளங்கபடமற்ற மனமே நிம்மதியான தூக்கத்திற்குத் தலையனை’ என்கிறார். இதேவேளை மோசோ என்கிற அறிஞர் பல ஆண்டுகளுக்கு முன்னர் கூறிய கூற்றை பலர் ஏற்றுக் கொள்ளவில்லை. கழுத்துக்கு அடியில் ஏற்படும் அழுத்தத்தால் மூளைக்கான இரத்த ஓட்டம் குறைந்து மூளை சோர்வடைவதால் தூக்கம் ஏற்படுகிறது என்பது இவரது கோட்பாடாக இருந்தது.

தீட்சித் என்ற இந்திய அறிஞர் இரத்தத்தில் லாக்டிக் அமிலம், அசைடில் கோல் ஆகியவற்றின் அதிகரிப்பாலும் தூக்கம் உண்டாகுவதாக கூறியுள்ளார். 1913ம் ஆண்டில் பிரான் என்ற நிபுணர் உடலில் உறக்கத்தைத் தருகின்ற நச்சுப் பொருள் இருப்பதைக் கண்டுபிடித்து அதற்கு சிyphotaxin என்றும் பெயரிட்டார். இதற்காக இவர் நீண்ட நேரம் தூங்காதிருந்த விலங்கின் மூளைத் தண்டுவடத்திரவத்தை எடுத்து விழித்திருக்கின்ற மற்றொரு விலங்கின் மூளை உறையினுள் ஊசி மூலம் செலுத்தி உறக்கம் போன்றதொரு நிலையை ஏற்படுத்தினார். பின்னர் இவ்விடயம் விவாதத்திற்குரிய விடயமாக மாறிவிட்டது.

தூக்கம் பற்றிய இன்னொரு கொள்கையும் உண்டு. அதன்பெயர் கிளிட்மேன் கொள்கை என்பதாகும். தொடுகை, சுவை, மோப்பம், பார்வை, செவி உணர்ச்சிகள் போன்றவை தூண்டப்படாத அமைதியான இருட்டறை தூக்கத்தை உண்டாக்கும் என்பதுதான் இந்த கிளிட் மேனின் கொள்கையாகும்.

இன்னொரு நிபுணரான மேகெளன் என்பவர் இவ்வாறு கூறுகிறார்: ‘மூளையில் விழிப்பு மையம், உறக்கத்திற்கான மையம் என்கிற சில பகுதிகள் உள்ளன. இவற்றை இயக்குவது மூளையின் வலை நார் சாம்பல் பொருள் என்கிற உறுப்பாகும். அவை மூளையின் மின் அலைகளில் மாற்றங்களை ஏற்படுத்தி தூக்கத்தை உண்டாக்குகின்றன’ என்கிற வாதத்தை முன்வைத்தார்.

பொதுவாக தூக்கத்தை இரண்டு வகையாகப் பிரிக்கின்றனர். தொடர்ந்து ஒரே சமயத்தில் உறக்கம் கொள்ளும் மனிதர்கள், பாம்பு வகைகள், பாடும் பறவைகள் ஆகியவை ஒருவகையாகும். மற்றயவை, விட்டுவிட்டு கோழித்தூக்கம் போடும் எலி, முயல், மற்றும் கொக்கரிக்கின்ற விலங்கினங்கள் என்பதாகும். எனினும் அமெரிக்க டாக்டரான, வேஹ்மேன் தூக்கத்தை நான்கு வகையாக பிரிக்கின்றார், நாம் உறங்கும் உறக்கம் மொத்த இரவு உறக்கத்தில் பத்து சதவிகிதத்தை எடுத்துக் கொள்கின்றது என்கிறார் இவர்.

தூங்கத் தொடங்கியவுடன் உள்ள சிறிய நேரத்தையும் சேர்த்து முதலாவது வகையாகும். இரண்டாவது வகை, தூங்கும் மொத்த நேரத்தின் 20 சதவிகிதத்தை எடுத்துக் கொள்கிறது. இது ஆழமான தூக்கத்தைக் கொண்டதுடன் பெரிய அலைகளும், குறைந்த வோல்ட்களும் கொண்ட மின்னலைகளைக் காணக்கூடிய நிலையாகும். இவ்வாறான நிலையில்தான் மனிதனது எல்லா உறுப்புக்களும் புத்துணர்ச்சி பெறுகின்றன. மூன்றாவதாக வேகமான கண் அசைவுகொண்ட தூக்கநிலை, அடுத்த 20 சதவிகித நேரத்தை எடுத்துக் கொள்கிறது. இந்நிலையில்தான் கனவுகள் தோன்றுகின்றன. என்றும் கூறுகின்றார். நான்காவது நிலையாக மீதமிருக்கின்ற 50 சதவிகிதமான நேரத்தை எடுத்துக் கொள்கிறது. இது வேகமான கண்ணசைவுகளையும், மெல்லிய சிறிய அலைகளையும் கொண்டுள்ள ஒரு நிலையாகும். தூக்க மாத்திரைகளைப் பயன்படுத்துகிறவர்கள் இந்த நிலைக்குரிய உறக்கத்தைப்பெற முடியாதுள்ளனர்.

மருந்துகள் மூலமாக உறக்கத்தைப் பெறுகின்ன வர்கள் 8 மணி நேரம் கண்ணை மூடிக்கொண்டே தான் இருக்கின்றார்களே தவிர, உண்மையான புத் துணர்ச்சி தரும் உறக்கத்தைப் பெறுவதில்லை என்றும் டாக்டர் வேஹ்மேன் கூறுகின்றார். மேலும் அவரது ஆய்வின்படி ‘பச்சைக் காய்கறிகள், இறைச்சி ஆகியவற்றில் காணப்படும் அமினோ அமிலமான எல். டிரிப்டோபன் இயற்கையான தூக் கத்தை உண்டாக்க உதவுகிறது’ என்றும் கூறு கின்றார்.

உறக்கம் இல்லாமல் இருப்பது என்பது உடல்நலத்திற்கு கேடாகும். அதனால் ஒவ்வொருவருக்கும் எத்தனை மணித்தியாலம் தூங்க வேண்டும் என்ற கால எல்லை வயதிற்கு வயது, நபருக்கு நபர் வித்தியாசப்படுகிறது. பொதுவாகவே குழந்தைகள் அதிக நேரம் உறங்கியாக வேண்டும். கற்கின்ற மாணவ மாணவிகளும் கொஞ்சம் அதிகமாகவே (8 மணித்தியாலம்) தூங்குவது நல்லது. அதனால்தான் என்னவோ பாடசாலைகளில் தூங்கும் மாணவர்களைக் காண்கிறோம். காரணம் ஓய்வில்லாமல் இரவு 10 மணி வரையும் ஒரே படிப்பு எல்லாவற்றுக்கும் ஒரு ஓய்வு வேண்டுமல்லவா? சரி. சாதாரண நடுத்தர வயதுடையவர்கள் 6 மணி நேரமும், வயதானவர்கள் 4 தொடக்கம் 5 மணி நேரம் தூங்கினாலும் போதும், ஆனால் இவர்கள் அனைவருமே அதிக நேரம் தூங்குபவர்களாகவே காணப்படுகின்றனர். தூக்கத்தை குறைத்து நேரத்தை மீதப்படுத்தித்தான் பார்ப்போமே!

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


 
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2010 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.