மூன்றிலிரண்டு பெரும்பான்மையும் ஐக்கிய தேசியக் கட்சியும்
மூன்றிலிரண்டு பெரும்பான்மையும் ஐக்கிய தேசியக் கட்சியும்
பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் மூன்றிலிரண்டு பெரும்பான்மையை வழங்க வேண்டும் என்பது
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதான பிரசாரத் தொனியாக உள்ளது. இன்றைய
தேர்தலில் வலியுறுத்தப்படுவது போல் முன்னைய எந்தத் தேர்தலிலும் மூன்றிலிரண்டு
பெரும்பான்மை வலியுறுத்தப்படவில்லை.
ஆளுந் தரப்பினர் மூன்றிலிரண்டு பெரும்பான்மையைக் கோருவதை நியாயப்படுத்துவதற்கான
காரணிகள் இல்லாம லில்லை. இனப் பிரச்சினைக்கான தீர்வைப் பொறுத்த வரையில்,
மூன்றிலிரண்டு பெரும்பான்மை இல்லாமை பதின்மூன்றாவது திருத்தத்துக்கு அப்பால்
செல்வதற்குப் பிரதான தடையாக உள்ளது. தேர்தல் முறையில் மாற்றம் செய்வதற்கும்
மூன்றிலிரண்டு பெரும்பான்மை அவசியம்.
இன, மத பேதமற்ற ஐக்கிய இலங்கையைக் கட்டி வளர்ப் பதற்கு இனப் பிரச்சினை தடையாக
இருப்பதை மறுக்க முடியாது. இப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான நம்பிகையூட்டும்
முயற்சி ஐக்கிய இலங்கையைக் கட்டி வளர்ப்பதற்கு அவசியமான முன்தேவை. மூன்றிலிரண்டு
பெரும்பான்மை இல்லாமல் இது சாத்தியமில்லை. இப்போது நடைமுறையிலுள்ள தேர்தல் முறை
தேர்தலில் ஊழல்களும் அடாவடித்தனமும் தலைதூக்கு வதற்குக் காரணமாக இருக்கின்றதென்பதைப்
பெரும்பாலா னோர் ஏற்றுக் கொள்கின்றனர். மேலும் இத் தேர்தல் முறை பணத்துக்கு
முக்கியத்துவம் அளிப்பதோடு ஒரே கட்சிக்குள் மோதல்கள் இடம் பெறுவதற்கும்
வழிவகுக்கின்றது.
இவ்விரு விடயங்களில் மாத்திரமன்றி வேறு சில விடயங் களிலும் மாற்றம் செய்ய வேண்டியதன்
அவசியம் கடந்த கால அனுபவத்திலிருந்து உணரப்பட்டதாலேயே மூன்றிலிர ண்டு பெரும்பான்மைக்
கோரிக்கையை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வலியுறுத்துகின்றது. பிரதான எதிர்க்
கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி ஆளுந் தரப்பின் மூன்றிலிரண்டு பெரும்பான்மைக்
கோரிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதை சாதாரண தேர்தல் எதிர்ப்பாக அல்லாமல் அதற்கு
அப்பாலும் பார்க்க வேண்டியுள்ளது.
அரசாங்கத்துக்கு மூன்றிலிரண்து பெரும்பான்மையை வழங்கக் கூடாது என்று ஐக்கிய தேசியக்
கட்சி பிரசாரம் செய்வது அதன் தோல்வியை ஒத்துக் கொள்ளும் எதிர்மறைப் பிர சாரமாக
இருப்பதோடு தேசத்தின் நலனுக்குக் குந்தகமாக வும் அமைகின்றது. இனப் பிரச்சினைக்கான
தீர்வு விடயத் திலும் தேர்தல் முறையை மாற்றுவதிலும் ஐக்கிய தேசியக் கட்சி
அரசாங்கத்துடன் ஒத்துழைக்கவில்லை. இனப் பிரச்சி னையின் தீர்வு தொடர்பான ஆலோசனைகளை
முன்வைப் பதற்கென நியமிக்கப்பட்ட சர்கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் செயற்பாடுகளில்
ஐக்கிய தேசியக்கட்சி பங்கு பற்றவில்லை. குழுவின் தலைவர் விடுத்த அழைப்பு களையும்
நிராகரித் துவிட்டது. அதேபோல, தேர்தல் முறை யில் மாற்றம் செய்யும் நோக்கத்துடன்
நியமிக்கப்பட்ட பாராளுமன்றத் தெரிவுக் குழுவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சி
ஒத்துழைப்பு வழங்கவில்லை.
இந்த நிலையிலேயே அவசியமான அரசியலமைப்பு மாற்றங்க ளைச் செய்வதற்காக மூன்றிலிரண்டு
பெரும்பான்மையை வழங்குமாறு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மக்களிடம் வேண்டுகோள்
விடுக்கின்றது. ஏற்கனவே இத் திருத்தங்க ளுக்கு ஒத்துழைப்பு வழங்காத ஐக்கிய தேசியக்
கட்சி அதே நிலைப்பாட்டில் மூன்றிலிரண்டு பெரும்பான்மைக் கோரிக்கையை எதிர்க்கின்றது.
இந்த எதிர்ப்பு தேசிய ஐக்கியத்தை ஏற்படுத்தவும் ஊழலற்ற தேர்தலை உறுதிப்ப டுத்தவும்
மேற்கொள்ளும் முயற்சிக்கு எதிரானது என்பதை மக்கள் விளங்கிக் கொள்வார்கள் என
நம்புகின்றோம்.