இந்தியாவின் தென்னக மாநிலங்களில் ஒன்று கர்நாடகா. அதன் தலைநகர் பெங்களூர்
என்றுதான் அழைத்தார்கள். இப்பொழுது கன்னட மொழியில் அது பெங்களூருவாக மாறிவிட்டது.
கோ- ஆ மாநிலத்திலிருந்து நீங்கள் ரயிலில் பங்களூரு போக வேண்டுமென்றால், நேரடியாகவே
ரெயில் சேவை கிடையாது. ஆனாலும் நீங்கள் சென்னை எக்ஸ்பிரசில் பயணம் செய்து
யெஷ்வான்பூர் சந்தியில் இறங்கிவிட வேண்டும். அந்தச் சிறு பட்டணம்,
பெங்களூருவிலிருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது. அதன் பின்னர்
நீங்கள் பஸ்ஸோ, ஓட்டோவோ பிடித்துக் கொண்டு ஒரு காலகட்டத்தில் மிக அழகான மீ மாநகரமாக
விளங்கும் பெங்களூருக்குச் செல்லலாம்.
இந்திய மீ மாநகரங்களில்
(Mega citia) கொல்கத்தா (மேற்கு வங்காளம்), மும்பாய் (மஹாராஷ்ட்ரா),
புதுதில்லி (டெல்ஹி), சென்னை (தமிழ் நாடு) பங்களூரு (கர்நாடகா), ஹைதராபாத் (ஆந்திரா)
ஆகியன முக்கியமானவை.
இந்தியாவின் வடமேற்கிலுள்ள கோ-ஆ (Goa) மாநிலத்தின் தலைநகரம் பனாஜி (பஞ்சம்) என்பது
நீங்கள் அறிந்ததுதான். பனாஜிக்கருகாமையில் (சுமார் 10 கி. மீ. தூரம்) ஒரு சிறிய
ரெயில்வே நிலையம் இருக்கிறது. அதிவிரைவு ரெயில் வண்டிகள் அந்த நிலையத்தில் இரண்டு
நிமிடங்களே தரித்து நிற்கும். அதுவும் இரவு வேளையில் நீங்கள் அந்த நிலையத்திலிருந்து
ரெயிலைப் பிடிப்பது மிக ஆபத்தானதும் கூட.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் கசப்பானதோர் அனுபவம் எனக்கு ஏற்பட்டது. மட்கோ - ஆன் (Madgoan)
என்ற இடத்திலிருந்துதான் சகல ரெயில் சேவைகளும் ஆரம்பிக்கின்றன. தலைநகரான
பனாஜியிலிருந்து அல்ல என்பதை நேயர்கள் அறிந்து வைத்திருங்கள். பனாஜியிலிருந்து மட்கோ-
ஆனுக்கு பஸ்ஸில் நெடுந்தூரம் சென்றுதான் ரெயிலைப் பிடிக்க வேண்டும். எனவேதான்
பனாஜிக்கு அருகாமையில் இருந்த சிற்றூரிலிருந்து சென்னை எக்ஸ்பிரஸைப் பிடிக்கத்
தீர்மானித்தேன்.
அன்றைய தினம் நள்ளிரவிலே சென்னை எக்ஸ்பிரஸ் சில மணிநேரம் தாமதமாய் நான் தயாராய்
நின்ற ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. ஒரு Kit bag ஒரு Hand Luggage சகிதம்,
மூச்சு இளைக்க இளைக்க ஓடி எனது பெட்டியை இனங்காண முனைந்தேன். அந்தோ சாபக்கேடு! எனது
Berth (படுக்கையுடன் கூடிய ஆசனம்) உள்ள Coach (பெட்டியின் கதவு உள்ளிருந்து
பூட்டப்பட்டிருந்தது. எத்தனை முறைதட்டியும் கதவை யாருமே திறக்கவில்லை. வினாடிகள்
இரண்டு நிமிடத்தை எட்டிப்பிடிக்கத் துரிதமாக விரைந்தன.
ரெயில் மெதுவாக நகரத் தொடங்கியது. ஓடினேன், ஓடினேன் ‘வாழ்க்கையின் ஓரத்திற்கே
ஓடினேன்” உங்களுக்குத் தெரிந்திருக்கலாம் நான் ஓர் Asthma நோயாளி என்பது. ஓடினால்
மூச்சு வாங்கும். சுவாசிக்க முடியாமல் பயங்கர நிலைமையை உண்டாக்கிவிடும்.
இரு கைகளிலும் நிறைந்த Bags 100 மீட்டர் வேக ஓட்டம், ஏதோவொரு பெட்டிக்குள் முதலில்
ஏறிவிட வேண்டும் என்ற தவிப்பு. ஓ! சொல்லில் விளக்க முடியாத பரிதவிப்பு!
ஓடும் வண்டியில், இந்த சிரேஷ்ட பிரஜை (Seniar Citizen) ஓடி ஓடி, அதிர்ஷ்டவசமாக
கதவு மூடப்படாதுவிருந்த குளிரூட்டப்பட்ட முதலாம் வகுப்புப் பெட்டியில்,
கைப்பாரத்துடன் தாவி ஏறிக் கொண்டேன். அது ஒரு அருந்தப்பு. ரெயிலில் ஆசுவாசத்துடன்
ஏறி உள்ளே போனால், கும்மிருட்டு. நடுச்சாமம் என்பதனால், எல்லோரும் விளக்கை
அனைத்துவிட்டுக் குறட்டைவிட்டுத் தூங்கிக் கொண்டிருந்தார்கள்.
நல்ல காலம் ரெயில்வே guard ஒருவர் அந்த இடத்தில் மும்முரமாக பதிவேட்டில் எழுதிக்
கொண்டிருந்தார். அவரிடம் எனது நிலைமையை விளக்கிக் கூறினாலும், அவர்
பொருட்படுத்தாது, நேரே நடைபாதை ஊடாகப் போய் எனது உறங்கும் படுக்கையை அணுகச்
சொன்னார். இருட்டில் குருடன் போன்று மிகவும் கஷ்டப்பட்டு நெடுந்தூரம் நடந்து
கடைசியில் எனது இருக்கையை இருட்டில் கண்டுபிடித்தேன். மூச்சு நின்றுவிடும்
போலிருந்தது. ஈழை உண்மையிலேயே அது எனக்கு ஒரு பயங்கரமான அனுபவமாய் இருந்தது.
சில நிமிடங்களின் பின்னர் எனது உடல் நிலை சுபாவமான நிலைமைக்குத் திரும்பியது.
நான் கற்ற பாடம்: ஒரு போதும், சிற்றூரிலிருந்து, பாரமான பெட்டிகளுடன், இரவுவேளையில்
நீண்ட அதிவிரைவு ரெயிலில் ஏறக்கூடாது என்பதுதான்.
எனவே 2008 இல் இந்தத் தவறைச் செய்யாமல், மட்கோ- ஆனிலிருந்தே எனது பயணத்தை ஆரம்பிக்க
வேண்டும் என்று தீர்மானித்தேன்.
கோ- ஆ தலைநகரான பனாஜியில் ரெயில்வே நிலையம் இல்லை என்பதைக் கண்டோம். அங்கிருந்து 12
கி. மீ. தூரத்தில் மாட்கோ- ஆன் இருக்கிறது. கோ-ஆ அனைத்துலகத் திரைப்பட விழாவில்
கலந்து கொள்ளச் சென்ற நான் பனாஜியிலிருந்து ஓட்டோ மூலமும், அதன் பின்னர் பஸ்
மூலமும் மட்கோ- ஆன் ரெயில்வே நிலையத்திற்குச் சென்றேன். ரெயில் பயணம் ஆரம்பிக்க பல
மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது.
முதற் காரியமாக எனது பெட்டிகளை பாரம் கொடுத்து பற்றுச்சீட்டைப் பெற்றுக்கொண்டேன்.
அது புத்திசாலித்தனமான காரியம். அன்புள்ள வாசகர்களும் இதனை அவதானிக்கவும். நான்
ரெயில் நிலையத்திற்குச் சென்றது காலை 10.00 மணிக்கு. யெஷ்வான்பூருக்கான ரெயில்
(சென்னை எக்ஸ்பிரஸ்) இரவு 9.00 மணிக்காகும். இதுவரை என்ன செய்வது? நீண்ட
நடைமேடையில் இடையிடையே காணப்பட்ட வாங்குகளில் ஒன்றில் உட்கார்ந்து கொண்டு
போவோரையும் வருவோரையும் பார்த்து அவானித்துக் கொண்டிருந்தேன். கையில் நீண்ட
பக்கங்களைக் கொண்ட ஆங்கில நாவல் ஒன்றிருந்த போதிலும், அதனைப் படிக்க மனம்வரவில்லை.
மாறாக எழுத்தாளன் என்ற முறையில் மனிதர்களின் குணாதிசயங்களை வியந்து பகுப்பாய்வு
செய்வது சுவாரஷ்யமாகப்பட்டது.
இந்த நிலையத்திலிருந்து வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த வெள்ளைத் தோலினர் பயணஞ் செய்யக்
காத்திருந்தனர். அவர்களுள் பெண்களும் இருந்தமை எனது கவனத்தை ஈர்த்தது.
அத்தகையவர்களின் பண்பாட்டுக் கோலங்களை அறிந்து கொள்ள அவர்களுள் ஒரு சிலருடன்
பேச்சுக் கொடுத்தேன். சிலருக்கு ஆங்கிலம் தெரிந்திருக்கவில்லை. ஆயினும் அரைகுறை
ஆங்கிலத்தில் அவர்கள் என்னுடன் சுவாரஷ்யமாக உரையாடினார்கள். சில புதிய தகவல்களைக்
கற்றுக்கொண்டேன். (14ம் பக்கம் பார்க்க)