Wednesday, April 27, 2016 - 4:30pm
RSM
பதுளையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்றுகொண்டிருந்த தனியார் பேரூந்து மாங்குளத்திற்கும் கனகராயன்குளத்திற்கும் இடையில் தடம்புரண்டு விபத்திற்குள்ளானது.
இன்று (27) அதிகாலை 2.00 மணியளவில் இடம்பெற்ற குறித்த விபத்தில் ஊவா பல்கலைக்கழக மாணவர்கள் 8 பேர் உள்ளடங்கலாக 16 பேர் படுகாயமடைந்த நிலையில் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதன்போது, ஊவா பல்கலைக்கழக மாணவன் ஒருவர் முதுகுப்புறத்தில் ஏற்பட்ட பலமான அடி காரணமாக மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
ஊவா பல்கலைக்கழக விஞ்ஞன மற்றும் தொழில்நுட்ப கற்கை நெறி முதலாம் வருட மாணவர்கள் பல்கலை விடுமுறைக்கு யாழ்ப்பாணம் கிளிநொச்சி ஆகிய பகுதிகளில் உள்ள தமது வீடுகளுக்கு பதுளை தனியார் பேருந்து ஒன்றில் யாழ் நோக்கி சென்று கொண்டிருந்த சமயம் சாரதிக்கு ஏற்பட்ட தூக்கம் காரணமாக மாங்குளத்திற்கும் கனகராயன்குளத்திற்கும் இடையில் உள்ள இலங்கை சிறப்பு அதிரடிப்படையினரின் முகாமிற்கு அருகில் உள்ள திருப்பத்தில் பேரூந்து தடம்புரண்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
(கிளிநொச்சி குறூப் நிருபா் - முருகையா தமிழ்செல்வன்)
Add new comment