7.9 நில அதிர்வு; சுமத்திராவில் சுனாமி எச்சரிக்கை!

பதிப்பு 02
மேற்கு சுமத்திரா, வட சுமத்திரா மற்றும் ஏசே (Aceh) பகுதியில் இந்தோனேஷிய அரசினால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
இதேவேளை குறித்த அனர்த்தம் தொடர்பில் கொக்கோஸ் தீவுகள், கிறிஸ்மஸ் தீவுகளுக்கு அவுஸ்திரேலியா சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளதோடு, பேர்த் உள்ளிட்ட மேற்கு அவுஸ்திரேலிய கரையோர பிரதேசத்திலுள்ளோர் எச்சரிக்கையாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளது.
 
படங் (Padang) எனும் பகுதியில் குறித்த அதிர்வு அதிகளவில் உணரப்பட்டுள்ளதாக AFP செய்திச்சேவை தெரிவித்துள்ளது.
 
இந்தோனேஷியாவின் சுமத்திரா பகுதியில், கடந்த 2004 டிசம்பர் 26 ஆம் திகதி பதிவான 8.9 ரிச்டர் அளவிலான நிலஅதிர்வு காரணமாக உலகம் முழுவதும் சுமார் 200,000 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
 

பதிப்பு 01
நில தட்டு எல்லைப் பகுதியான இந்தோனேசியாவின் சுமத்திரா தீவு பகுதியில் 7.9 ரிச்டர் அளவிலான நில அதிர்வு பதிவாகியுள்ளது.
 
தென்மேற்கு சுமத்திரா பகுதியில் இடம்பெற்றுள்ள இந்நில அதிர்வின் காரணமாக ஏற்பட்டுள்ள சேத விபரம் இது வரை தெரிய வராத நிலையில், அப்பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
 
இதேவேளை, இவ்வனர்த்தம் காரணமாக இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என இலங்கை அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளதோடு, கரையோர மக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Add new comment

Or log in with...