பொன்சேகாவை இடைநிறுத்துமாறு வழக்கு

ஐக்கிய தேசிய கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் இன்று (18) வழக்குப் பதிவு செய்துள்ளது. 
 
அத்துடன் அப்பதவியில் சரத் பொன்சேகா கடமையாற்றுகின்றமை சட்டத்திற்கு புறம்பானது என தெரிவித்துள்ள அவ்வமைப்பு, ஐ.தே.கவினால் தேர்தலுக்கு முன், தேர்தல்கள் ஆணையாளரிடம் சமர்ப்பித்த தேசியப் பட்டியலில் சரத் பொன்சேகாவின் பெயர் உள்ளடக்கப்படாத நிலையில், தற்போது வழங்கப்பட்டுள்ள நியமனத்தின் மூலம் மக்கள் ஆணை புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குறித்த மனுவில் தெரிவித்து அந்நியமனத்தை இடைநிறுத்துமாறு கோரப்பட்டுள்ளது.
 
மேலும், இதன் மூலம் அரசியலமைப்பின் 19 ஆவது சரத்து மீறப்படுவதாகவும் குறித்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 
மாற்றுக் கொள்கைகளுக்கான மத்தியநிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளரான பேராசிரியர் பாக்கியசோதி சரவணமுத்துவினால் உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட குறித்த மனுவின் பிரதிவாதிகளாக, ஐ.தே.க.வின் செயலாளர் நாயகம் கபீர் ஹாசீம், சரத் பொன்சேகா எம்.பி., சபாநாயகர், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், பாராளுமன்ற செயலாளர் நாயகம், சட்ட மாஅதிபர் உள்ளிட்ட 08 பேர் உள்ளடங்குகின்றனர்.
 
காலஞ் சென்ற அமைச்சர் எம்.கே.டி.எஸ். குணவர்தனவின் தேசிய பட்டியில் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு, கடந்த பெப்ரவரி மாதம் 09 ஆம் திகதி சரத் பொன்சேகா நியமிக்கப்பட்டிருந்தார்.

Add new comment

Or log in with...