Wednesday, January 13, 2016 - 7:15am
கணவர் வீட்டில் இல்லாத போது சம்பவம்
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விநாயகபுரம் பிரதேசத்தில் மற்றுமொருவருடன் ஓடிப்போன முன்னாள் மனைவியின் உறவினர்களால் இரண்டாம் மனைவி மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
கணவர் வீட்டில் இல்லாத சந்தர்ப்பத்தில் நடத்தப்பட்ட இத்தாக்குதல் சம்பவத்தில் இரண்டாவது மனைவி படுகாயங்களுக்குள்ளாகிய நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (12) இடம்பெற்ற இச்சம்பவம், பேத்தாழை, விநாயகபுரம் பகுதியில் வசிக்கும் 39 வயதான பெண் ஒருவரே தாக்குதலுக்கள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தனது முதல் மனைவி மற்றுமொருவருடன் ஓடிச் சென்றுவிட தனது மகளை தனது சகோதரியின் வீட்டில் வைத்து வளர்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் பிள்ளையின் அரவணைப்புக்காக மறுமணம் செய்யுமாறு உறவினர்களால் மேற்கொள்ளப்பட்ட வற்புறுத்தல் காரணமாக குறித்த கணவன் அதே பகுதியிலேயே இரண்டாந்தாரமாக ஒரு பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில் முதல் மனைவிக்குப் பிறந்த மகள் வயதுக்கு வரவே அவரை பார்வையிட வந்த முதல் மனைவியின் உறவுக்காரர்கள் என்று சொல்லப்படும் 8 பேர் கொண்ட குழுவினரால் இரண்டாம் மனைவி தாக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
படுகாயங்களுக்குள்ளாகிய குறித்த பெண் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அதேவேளை இத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(வாழைச்சேனை விசேட நிருபர் - ஹரீஸ்)
Add new comment