விபத்தில் வான் சாரதி, மூன்று பெண்கள், இரண்டு வயது சிறுமி ஆகிய ஐவர் உயிரிழந்துள்ளனர். பொலிஸாரின் தகவலின் படி சுமார் 26 பேர் காயமடைந்து வரக்காபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஐவர் ஆபத்தான நிலையில் கேகாலை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். படுகாயமடைந்திருந்தவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளாரென ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன.
வான் சாரதி ஏனைய வாகனங்களை முந்திச் செல்லும் நோக்கில் கவனயீனமாக வாகனத்தை (வேனை) செலுத்தியதே இவ்விபத்து ஏற்படக் காரணம் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்துச் சம்பவத்தையடுத்து இப்பாதையில் நீண்ட நேரம் வாகன போக்குவரத்துகள் தடைப்பட்டன.
விபத்திற்குள்ளான வானை பொலிஸார் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து வந்ததன் பின்னரே வாகன போக்குவரத்து சீரடைந்தது. விபத்துக்குள்ளான வான் மிகவும் மோசமான நிலையில் சுக்கு நூறாகிக் காணப்பட்டது.
சம்மாந்துறையிலிருந்து நேற்று முன்தினம் இரவு 9.30 அளவில் மூன்று வான்களில் கொழும்புக்கு கடவுச்சீட்டு பெறுவதற்காக வந்த போதே இச்சம்பவம் இடம்பெற்றது. இவர்கள் அனைவரும் உம்ரா செல்வதற்காக முன்னேற்பாடுகளோடு கடவுச்சீட்டு பெற கொழும்பு வந்ததாக தெரிய வருகிறது. இவர்கள் வந்த மூன்று வான்களுள் ஒரு வானே விபத்துக்குள்ளாகியது. சம்பவம் நடக்கின்ற பொழுது இந்த வானில் 19 பேர் இருந்துள்ளதாக தெரிய வருகிறது. விபத்து சம்பவத்தில் இவர்களுள் ஐந்து பேரே ஸ்தலத்தில் பலியாகினர்.
சம்மாந்துறையை சேர்ந்த பாத்திமா சாரா (2 வயது), சின்னித்தம்பி பாத்திமா பரூஸா (25 வயது), உதுமா லெப்பை நுஸ்ரத் ஜகான் (வயது 37), மொஹமட் இப்ராஹிம் ஹபீபுன்னிஸா (வயது 69) மற்றும் வான் சாரதியான மொஹமட் தம்பி இஷாக் அஹமட் (வயது 29) ஆகியோரே உயிரிழந்தவர்களென அடையாளங் காணப்பட்டுள்ளது.
மோதிய பயணிகள் பஸ்ஸில் பயணம் செய்த 34 பேரில் 12 பேர் காயமடைந்து வரக்காபொலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சடலங்கள் தொடர்பான பிரேத பரிசோதனை நேற்று பிற்பகல் வரக்காபொல வைத்தியசாலையில் இடம்பெற்றது. வரக்காபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(வரக்காப்பொலை தினகரன், தினகரன் செங்கடகல நிருபர்கள்)
சம்மாந்துறை வேன் விபத்து; குழந்தை உட்பட ஐவர் பலி
சம்மாந்துறையிலிருந்து கொழும்பு நோக்கி வந்த வேன் ஒன்று, பஸ்ஸுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஐவர் உயிரிழந்துள்ளனர்.
Add new comment