பிரதமர் ,மற்றும் நிதியமைச்சர் ஆகியோர் இருவேறு வரவுசெலவுத்திட்டங்களை முன்வைத்திருப்பதால் எதனை பாராளுமன்றம் ஏற்றுக்கொள்வது என்ற குழப்பம் ஏற்பட்டிருப்பதாக ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்றுமுன்தினம் முன்வைத்த வரவுசெலவுத்திட்டத்திலும், அதற்கு முன்னர் நிதியமைச்சர் முன்வைத்த வரவுசெலவுத்திட்டத்திற்கும் இடையில் பரஸ்பர வித்தியாசங்கள் காணப்படுகின்றன. இதில் எதனை ஏற்றுக்கொள்வது என்ற குழப்பம் ஏற்பட்டிருப்பதாக அவர் கூறினார்.
பொதுநிர்வாக அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தை ஆரம்பித்துவைத்து உரையாற்றும்போதே விஜித ஹேரத் எம்பி இதனைத் தெரிவித்தார். பிரதமர், நிதியமைச்சர் ஆகியோர் இருவேறு வரவுசெலவுத்திட்டங்களை முன்வைத்துள்ளனர்.
இந்த நிலையில் வெ ளிநாடு சென்றிருக்கும் ஜனாதிபதி நாடு திரும்பியதும் மக்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் வரவுசெலவுத்திட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவரவிருப்பதாகத் தெரியவருகிறது. இவ்வாறான தொரு நிலையில் எதனை ஏற்றுக்கொள்வது என்பதை அரசாங்கமே தெளிவுபடுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இதன்போது குறுக்கிட்டு பதிலளித்த சபை முதல்வர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல, வரவுசெலவுத்திட்டத்தின் குழுநிலை விவாதத்தின் போது திருத்தங்களை மேற்கொள்ள முடியும். வரவுசெலவுத்திட்டத்தின் முன்மொழிவுகளை மாற்றுவதற்கு குழுநிலையில் அவகாசம் உள்ளது என்றார்.
இதன் பின்னர் ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பி கருத்து வெளியிட்ட எதிர்க்கட்சியின் பிரதம கொரடா அநுரகுமார திசாநாயக்க, பிரதமர் யோசனைகளை முன்வைத்திருப்பதைப் போன்று, தாமும் முன்வைத்த யோசனைகளை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளுமா எனக் கேள்வியெழுப்பினார். வரவுசெலவுத்திட்ட விவாத இறுதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட யோசனைகள் எவை என்பதை நிதியமைச்சர் பாராளுமன்றத்துக்கு அறிவிப்பார் என அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல சுட்டிக்காட்டினார்.
இடையீட்டைத் தொடர்ந்து உரையைத் தொடர்ந்த விஜித ஹேரத், அப்படியாயின் பிரதமர் அறிவித்த விடயங்கள் வெறும் யோசனைகளே. இவை நடைமுறைப்படுத்தப்படுமா என்பது இன்னமும் முடிவாக அறிவிக்கப்படவில்லை. எனவே சம்பள உயர்வு உட்பட பிரதமர் முன்மொழிந்திருக்கும் யோசனைகள் இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை என்பதை அரசாங்க ஊழியர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் எனக் கூறினார்.
எம்.எஸ்.பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்
Add new comment