Friday, November 20, 2015 - 7:30am
மீட்டியாகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, கலுபே உடுமுல்லை பகுதியில் ஒன்றரை மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 32 வயது இளைஞர் பலியானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று (20) அதிகாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் அப்பிரதேசத்தைச் சேர்ந்த இந்திக தமீர மென்டிஸ் விக்ரமசிங்க எனும் திருமணமாகா இளைஞர் ஒருவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.
நேற்றிரவு (19) இடம்பெற்ற திருமண வைபவத்தில் கலந்துகொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் வந்துள்ளதோடு, குறித்த திருமண வீட்டிற்கு அருகிலிருந்த வீட்டில், மோட்டார் சைக்கிளை வைத்து விட்டு சென்றுள்ளார்.
நிகழ்வுகளின் பின்னர், இவர் தனது சைக்கிளை எடுப்பதற்காக குறித்த வீட்டிற்கு சென்ற வேளையிலேயே துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
T56 ரக துப்பாக்கியின் மூலம் இத்துப்பாக்கிச் சூடு நிகழ்த்தப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார், தெரிவித்தனர்.
வேறொரு நபரை இலக்கு வைத்தே இத்துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றிருக்கலாம் எனவும், குறித்த நபரை கொல்வதற்கு எவ்வித காரணமும் இல்லை என பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.
இதுவரை சம்பவம் தொடர்பில் எவரும் கைதுசெய்யப்படவில்லை என்பதோடு, பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
Add new comment