ஜனாதிபதி நாளை தாய்லாந்து பயணம்

இலங்கைக்கும் தாய்லாந்துக்கு மிடையில் இரா ஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 60 ஆவது ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு ஒழுங்கு செய்யப்பட்டுள்ள விழாவில் பங்குபற்றுவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை 01ஆம் திகதி தாய்லாந்துக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது இரு நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டதைக் குறிக்குமுகமாகவும் இலங்கை மற்றும் தாய்லாந்துக்கிடையிலான சமய உறவுகளைப் பலப்படுத்தும் முகமாகவும் மஹியங்கனை ரஜமஹாவிகாரை யிலிருந்து புனித தந்தம் எடுத்துச் செல்லப்பட்டு தாய்லாந்து புத்தமொந்தோனில் காட்சிப்படுத்தப்படவுள்ளது. இந்த நிகழ்வை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் அங்குரார்ப்பணம் செய்து வைக்கவுள்ளார்.

நாளை மறுதினம் 02 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்படும் இந்த நிகழ்வு எதிர்வரும் 16ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வை புத்தசாசன அமைச்சு, பெளத்த விவகார திணைக்களம் மற்றும் மஹியங்கனை ரஜமஹாவிகாரயவும் இணைந்து ஒழுங்கு செய்துள்ளன.

இந்த நிகழ்வோடு இணைந்ததாக பெளத்த சமயத்தின் பொது ஆன்மீக தொடர்புகளின் அடிப்படையிலமைந்த ஒரு நட்புறவுச் சின்னமாக கெளத்தம புத்தரின் ஒரு உருவச்சிலையை தாய்லாந்து மக்களுக்கு அன்பளிப்புச் செய்யும் நிகழ்வொன்றும் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வுக்கும் ஜனாதிபதி தலைமைதாங்கவுள்ளார்.

மஹியங்கனை ரஜமஹாவிகாரையில் பிரதம தேரர் உருலவத்தே தம்மரகித தேரர் தலைமையிலான 60 பிக்குகளைக் கொண்ட ஒரு குழுவும் தாய்லாந்துக்கான இந்த விஜயத்தில் ஜனாதிபதியுடன் இணைந்து கொள்ளவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த விஜயத்தின் போது தாய்லாந்து மன்னர் பூமிபோல் அதல்யாதேஜ் மற்றும் தாய்லாந்து பிரதமர் ஜெனரல் பிரயுத் சன் ஓ சா ஆகியோர்களை சந்தித்து இரு நாடுகளுக்கிடையேயான சமய உறவுகளை மேலும் பலப்படுத்துவது குறித்து கலந்துரையாடவுள்ளார்.


Add new comment

Or log in with...