பொருளாதாரத்தை சரிசெய்ய சூடான் அமைச்சர்கள் நீக்கம்

நாட்டின் பொருளாதார நெருக்கடியை சரிசெய்வதற்காக சூடான் ஜனாதிபதி ஒமர் அல் பஷீர் அரசை கலைத்துள்ளார். அமைச்சர்களின் எண்ணிக்கை 31 இல் இருந்து 21 ஆக குறைக்கப்படும் என்று ஜனாதிபதி ஞாயிறன்று வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

“நாடு முகம்கொடுத்திருக்கும் பொருளாதார நிலைமையை சரிசெய்வதற்கு பிரதமர், மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர் என்று அனைத்து தரப்புகளிலும் அரசை கலைப்பதற்கு ஜனாதிபதி ஒமர் அல் பஷீர் அறிவித்துள்ளார்” என்று வெளியிடப்பட்டிருக்கும் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

சூடானில் பணவீக்கம் 65 வீதத்திற்கு மேல் உயர்ந்திருப்பதோடு உணவு மற்றும் ஏனைய பொருட்களின் விலை கடந்த ஆண்டை விடவும் இரட்டிப்பாகியுள்ளது.

எனினும் 2011 ஆம் ஆண்டு தென் சூடான் தனி நாடாக பிரிந்து சென்றதை அடுத்து சூடானுக்கு கால் பங்கு எண்ணெய் வருவாய் பறிபோன நிலையில் அந்த நாடு தொடர்ச்சியாக பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...