பிடியாணை பிறப்பிக்கப்பட்ட தேரர்கள் நால்வருக்கும் பிணை

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட தேரர்கள் நால்வருக்கும் பிணை-Warrant Issued 4 Thero-Granted Bail

 

கடந்த 2016 இல் கொழும்பில் இடம்பெற்ற, அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களின் ஆர்ப்பாட்டத்தின்போது, அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நான்கு தேரர்களுக்கும் பிணையில் செல்ல, நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது

குறித்த வழக்கு இன்று (03) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றபோது, ரூபா ஒரு இலட்சத்தி 50 ஆயிரம் கொண்ட சரீரப் பிணையில் விடுதலை செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டார்.

மெடில்ல பஞ்சாலோக்க தேரர், பெங்கமுவே நாலக தேரர், இத்தேகந்த சத்தாதிஸ்ஸ தேரர், மாகல்கந்த சுதத்த தேரர் ஆகியோருக்கு எதிராகவே குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்க்கது.

ஜனாதிபதி செயலகத்தின் பொருட்களுக்கு சேதம் விளைவித்தமை, பொலிசாரின் தண்ணீர் பவுசருக்கு சேதம் விளைவித்தமை உள்ளிட்ட அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டுகள் அவர்கள் மீது முன்வைக்கப்பட்டிருந்தன.

குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பில், மேற்படி நான்கு தேரர்களும் சந்தேகநபர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிசார் நீதிமன்றில் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த தேரர்களை கைது செய்யுமாறு தெரிவித்து, கடந்த ஓகஸ்ட் 31 ஆம் திகதி, நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த விடயம் தொடர்பில் தேரர்கள் தொலைக்காட்சியின் ஊடாகவே அறிந்து கொண்டதாகவும், அப்போது நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவடைந்திருந்ததாகவும், அவர்கள் சார்பில் முன்னிலையான, ஜனாதிபதி சட்டத்தரணி, ஷிரந்த வலலியத்த நீதிமன்றிற்கு தெரிவித்தார்.

இந்நிலையில், இன்று (03) காலை இராணுவ வீரர்கள் மற்றும் தேரர்களுக்கு எதிராக இடம்பெறும் விடயங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, 'தாய்நாட்டின் பாதுகாப்பாளர்கள்' (மாத்ரு புஶ்ரீமிய சுரக்ஷகயோ) அமைப்பினால் கொழும்பு புறக்கோட்டையிலிருந்து எதிர்ப்புப் பேரணியொன்று இடம்பெற்றது.

இப்பேரணி, கோட்டை புகையிரத நிலையத்தின் முன்னால் ஆரம்பமாகி, ஜனாதிபதி செயலகம் வரை செல்ல முற்பட்ட வேளையில், லேக் ஹவுஸ் அருகில், காலி வீதிக்குள் நுழையும் லோட்டஸ் வீதி பொலிசாரால் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சிறிது நேரம் தங்களது ஆர்ப்பாட்டத்தை நடாத்திய அவர்கள், அங்கிருந்து கலைந்து சென்றனர் என்பது குறிப்பிடத்கத்கது.

 


Add new comment

Or log in with...