களியாட்ட நிகழ்வொன்றை மையப்படுத்தி, பொலிசாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஒரு பெண் உள்ளிட்ட 28 பேர் கை செய்யப்பட்டுள்ளனர்.
கல்கிஸ்ஸை ஹோட்டல் வீதியில், கடற்கரையில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்று (19) நண்பகல் 12.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை, ஒழுங்குசெய்யப்பட்டிருந்த களியாட்ட நிகழ்விற்கு வந்த சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
குறித்த களியாட்ட நிகழ்வு தொடர்பில், கல்கிஸ்ஸை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, குறித்த களியாட்ட நிகழ்வை மையப்படுத்தி, அப்பிரதேசத்தில் பொலிஸ் தடைகள் மூலம் மேற்கொண்ட சோதனைகள் மற்றும் சிவில் அதிகாரிகள் மூலம் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் களுத்துறை, மாத்தறை, றாகம, ஹோமாகம, பேலியகொடை, புத்தள, கல்கிஸ்ஸை, இரத்மலானை, பயாகல, புத்தளம், மாவனல்லை, நுகேகொடை, பொரலஸ்கமுவ, தெமட்டகொடை, மருதானை, வௌ்ளவத்தை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த, 19 முதல் 45 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கைதான 12 பேர், பல்வேறு வகையான போதை மாத்திரைகளை வைத்திருந்தமைக்காகவும், 12 பேர் கஞ்சாவை வைத்திருந்தமைக்காகவும், மூவர் சட்டவிரோத சிகரெட்டுகளை வைத்திருந்தமைக்காகவும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களை இன்று (20) கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கல்கிஸ்ஸை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Add new comment