மன்னார் முருங்கனில் நேற்று (29) ஞாயிற்றுக்கிழமை ஆலய வழிபாட்டுக்கு பெற்றோருடன் சென்ற 02 வயதுச் சிறுவன் கடத்தப்பட்டு சுமார் 4 மணி நேரத்தில் குறித்த சிறுவனை பொலிஸார் மீட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
நேற்று (29) மதியம் 1.00 மணியளவில் முருங்கன் பகுதியில் உள்ள ஆலயத்துக்கு 2 வயதுடைய சிறுவன் பெற்றோருடன் சென்றுள்ளார்.
சிறிது நேரத்தின் பின்னர் சிறுவனை ஆலய பகுதியினுள் காணாத நிலையில் பெற்றோர் அவரை தேடியுள்ளனர். எனினும் சிறுவனை அங்கு காணவில்லை.
இதனையடுத்து பெற்றோர் முருங்கன் பொலிஸ் நிலையத்திற்கு உடனடியாக முறைப்பாடு செய்ததோடு, சிறுவனின் உறவினர் ஒருவர் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனின் கவனத்திற்கும் கொண்டு சென்றிருந்தார்.
இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகரின் கவனத்திற்கும் கொண்டு வந்திருந்தார். இதற்கமைய துரித நடவடிக்கைகளை மேற்கொண்ட பொலிஸார் விசாரணைகளை தொடர்ந்தனர்.
இதன்போது, குறித்த ஆலயத்திற்கு வந்த திருக்கோவிலைச் சேர்ந்தவர், வழிபாடு முடிவடைவதற்கு முன் ஆலயத்திலிருந்து வெளியே சென்றதை விசாரணைகளின் மூலம் அறிந்த பொலிஸார் உடனடியாக திருக்கோவில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதோடு, வவுனியா மற்றும் மன்னார் மாவட்டத்தின் ஏனைய பொலிஸ் பிரிவுகளும் தகவல் வழங்கியுள்ளனர்.
இதன் போது குறித்த சந்தேக நபர் வவுனியா பேருந்து நிலையத்திலிருந்து மன்னார் நோக்கிச் செல்லும் பேருந்தில் சிறுவனுடன் ஏறியதை வவுனியா பொலிஸார் அவதானித்துள்ளனர்.
உடனடியாக செயல்பட்ட பொலிஸார் சந்தேகநபரை மடக்கிப் பிடித்து கைது செய்ததோடு குறித்த சிறுவனையும் மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட சிறுவன் பொலிஸாரின் விசாரணைகளின் பின்னர் இன்று (30) பிற்பகல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
சிறுவக் கடத்தப்பட்டமை தொடர்பாகவும், கடத்தியமைக்கான காரணம் தொடர்பாகவும் வவுனியா மற்றும் மன்னார்
பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(எஸ்.றொசேரியன் லெம்பேட்)
Add new comment