12 வயது சிறுவன் வைத்தியசாலையில் அனுமதி
சம்மாந்துறை, வளத்தாப்பிட்டி பிரதேசத்தில் இன்று (28) மதியம் 2.30 மணியளவில் இடம்பெற்ற பாரிய வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் மரணமடைந்துள்ளதோடு, சிறுவன் ஒருவன் உள்ளிட்ட இருவர் காயமடைந்துள்ளார்.
கண்டி - மாவனல்லையில் இருந்து வந்த வேன் ஒன்றும் டிப்பர் ரக லொறியும் மோதியதில் இப்பாரிய விபத்து ஏற்பட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிசார் தெரிவித்தனர்.
வளத்தாப்பிட்டி வாகன புகை பரிசோதனை நிலையத்திற்கு முன்னால் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது
இவ்விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சின்னாலெப்பை அஹமது யாசின் மொஹமட் லாபிர் (55), சக்காப் சியானா (42) ஆகிய இருவருமே இவ்வாறு பலியாகியுள்ளனர்.
விபத்தை அடுத்து, சம்பவ இடத்திலிருந்து அம்பாறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர். மரணித்தவர்களின் சடலங்கள் அம்பாறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
இவ்விபத்துச் சம்பவத்தில் படுகாயமுற்ற நிஸாம்டீன் மின்ஹாஜ் எனும் 12 வயது சிறுவன், அம்பாறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இச்சம்பவத்தில் காயமடைந்த டிப்பர் வாகன சாரதி சம்மாந்துறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
(கல்முனை மத்திய தினகரன் நிருபர் - அஸ்ரப் கான்)
Add new comment