அதிபருக்கு முறையற்ற இடமாற்றம்; ரூ. 2 1/2 இலட்சம் வழங்க உத்தரவு

 

  • அரசாங்கத்தினால் ரூபா 50 ஆயிரம் நஷ்டஈடு
  • இரு மாதங்களுக்குள் பழைய இடத்திற்கு மாற்றவும் உத்தரவு

அதிபர் ஒருவருக்கு சட்டவிரோதமாக, முறையற்ற விதத்தில் வழங்கப்பட்ட இடமாற்றத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பில், குறித்த அதிபருக்கு ரூபா 2 இலட்சத்து 50 ஆயிரம் நஷ்டஈடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

வட மத்திய மாகாகண முன்னாள் முதலமைச்சர் பேசல ஜயரத்ன பண்டாரவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குறித்த மனு தொடர்பில், குறித்த நஷ்டஈட்டை வழங்குமாறு உச்ச நீதிமன்றம் அவருக்கு உத்தரவிட்டுள்ளதோடு, மனுதாரருக்கு மேலும் ரூபா 50 ஆயிரத்தை நஷ்டஈடாக அரசாங்கம் வழங்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த மனு இன்று (28) ஈவா வனசுந்தர உள்ளிட்ட மூவரடங்கிய நீதிபதிகளால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டதோடு, இன்றிலிருந்து இரு மாதங்களுக்குள் குறித்த இடமாற்றத்தை இரத்துச் செய்து, குறித்த அதிபரை முன்னர் பணி புரிந்த இடத்தில் பணிக்கு அமர்த்துமாறும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மனுதாரரான, கருணாரத்ன பண்டார, கடந்த 2016 ஆம் ஆண்டு, அநுராதபுரம் நிவத்தக சைத்திய மகா வித்தியாலய அதிபராக கடமையாற்றியிருந்த வேளையில், 2016 செப்டெம்பர் 09 இல் தமது பாடசாலையில் இடம்பெற்ற அடிக்கல் நடும் விழாவை உரிய முறையில் ஒழுங்கு செய்யவில்லை என தெரிவித்து, முதலமைச்சரினால் தான் இடமாற்றப்பட்டதாக அவரது மனுவில் தெரிவித்திருந்தார்.

அத்துடன் குறித்த முடிவுக்கு எதிராக தான் அவரிடம் மேன்முறையீடு செய்தபோதும், அது நிராகரிக்கப்பட்டதாகவும் அதிபர் அதில் சுட்டிக்காட்டியுள்ளார். அதற்கமைய, இதன் மூலம் தனது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பு வழங்குமாறும், தனது இடமாற்றத்தை இரத்துச் செய்யுமாறும், அதிபர் தனது மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.

அதனடிப்படையில் இடம்பெற்ற நீண்ட விசாரணைகளின் பின்னர், வழங்கப்பட்டுள்ள இடமாற்றத்தின் மூலம், முன்னாள் வட மத்திய மாகாண முதலமைச்சர் பேசல ஜயரத்ன பண்டார, மனுதாரரின் அடிப்படை உரிமையை மீறியுள்ளதாக, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...