கட்டுநாயக்க விமானப்படை முகாமுக்கு அருகில் குண்டு

கட்டுநாயக்க விமானப்படை முகாமுக்கு அருகில் வெடிக்காத குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இக்குண்டு கடந்த 2009 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் விமானத்தால் போடப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

இது பற்றி விமானப்படை பேச்சாளர் ஜிஹான் செனவிரத்ன குறிப்பிடுகையில் வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊழியர்கள் குறிப்பிட்ட இடத்தில் மேற்கொண்டுள்ள வீதி புனர்நிர்மாணப் பணிகளின்போதே இக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.

மேலும், இக்குண்டு பிளாஸ்திக்கினாலான உருளை ஒன்றினுள் காணப்பட்டுள்ளது. இக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ள இடம் விடுதலைப் புலிகளின் வீழ்த்தப்பட்ட விமானம் காணப்பட்ட இடத்திலிருந்து சுமார் 50 மீற்றர் தூரமாகும். நாங்கள் இக்குண்டை பாதுகாப்பாக அப்புறப்படுத்தியுள்ளோம். விரைவில் விமானப்படை குண்டு செயலிழக்கும் பிரிவால் செயலிழக்கச் செய்யபடும் எனவும் தெரிவித்தார்.

கடந்த 2009 பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி எல்.ரி.ரி.ஈ இயக்கம், அதற்கு சொந்தமான சிறு விமானத்தின் மூலம் கட்டுநாயக்கவிலுள்ள இலங்கை விமானப்படையையும் பண்டாரநாயக்க விமானநிலையத்தையும் குறி வைத்து தாக்குதல் நடாத்த முனைந்தது. இதன்போது குறிப்பிட்ட விமானத்தை விமான எதிர்ப்பு துப்பாக்கியின் மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...