கடந்த ஆட்சியிலும் பார்க்க கேஸ் விலை ரூபா 465 குறைவு

 
கடந்த ஆட்சியில் இருந்துவந்த சமையல் எரிவாயுவின் விலையிலும் பார்க்க ரூபா 465 குறைவாகவே தற்போது சமையல் எரிவாயுவின் விலை காணப்படுவதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
 
இன்றைய தினம் (27) தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய "அமைச்சரவை அனுமதியுடனா சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டது?" எனும் கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 
வாழ்க்கைச் செலவின் அடிப்படையில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, குறித்த அதிகரிப்பு தொடர்பில் அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டதாக அவர் இதன்போது தெரிவித்தார்.
 
தாங்கள் ஆட்சிக்கு வந்து பல்வேறு சந்தர்ப்பங்களில் சமையல் எரிவாயு விலை குறைப்பு மேற்கொள்ளப்பட்டதாக சுட்டிக் காட்டினார்.
 
அந்த வகையில்,
 
29.01.2015 இல் Rs.300 இனாலும்
15.07.2015 இல் Rs.100 இனாலும்
23.11.2015 இல் Rs.150 இனாலும்
24.11.2016 இல் Rs.25 இனாலும் சமையல் எரிவாயுவின் விலையை குறைத்துள்ளதாகவும், இதன் மூலம் ரூபா 575 விலைக் குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
 
ஆயினும் தற்போது ரூபா 110 இனால் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், பொதுமக்களுக்கு தற்போதும் ரூபா 465 இலாபம் இருப்பதாக சுட்டிக்காட்டினார்.
 

Add new comment

Or log in with...