பொதுத் தேர்தலின் பின்னர் பெண்களுக்கான தேசிய ஆணைக்குழு அமைக்கப்படும்

 நாட்டிலுள்ள பெண்களை வலுவூட்டி அவர்களின் வளர்ச்சி மற்றும் அபிவிருத்திக்காக தேர்தலின் பின்னர் பெண்களுக்கான தேசிய ஆணைக்குழுவொன்று அமைக்கப்படவிருப்பதாக சிறுவர் அபிவிருத்திக்கான இராஜாங்க அமைச்சர் ரோஸி சேனாநாயக்க தெரிவித்தார்.

சிறிக்கொத்தாவில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் பெண்களின் வளர்ச்சி தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

பெண்களின் பாதுகாப்பு மற்றும் அவர்கள் மீதான அக்கறையை அதிகரிக்கும் நோக்கிலேயே இந்த ஆணைக்குழு அமைக்கப்படும். இதனூடாக பெண்களுக்கு சட்டரீதியான பாதுகாப்பு மற்றும் தங்கள் குறைகளை நிவர்த்தி செய்வதற்கு வசதியாக அமையும்.

பெண்களால் எதிர்கொள்ளப்படும் பிரச்சினைகளை ஆராய்வதற்கு சகல தேர்தல் தொகுதிகளிலும் பெண்களுக்கான கவுன்சிலிங் நிலையங்கள் அமைக்கப்படும். அடிப்படை கல்வியான ஆரம்பக்கல்வி கற்பிப்பதற்கு பெண்களுக்குப் பயிற்சி வழங்கும் திட்டங்கள் வகுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள கொள்கைத் திட்டங்கள் நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்மையை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருப்பதாகவும், இவை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் கூறினார்.

ஊழல், மோசடிக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனச் சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர், மஹிந்த ராஜபக்ஷவும் அவருடைய சகாக்களும் மீண்டும் ஆட்சிக்கு வருவது நாட்டை அபிவிருத்தி செய்யவல்ல, மேலும் கொள்ளைகளை மேற்கொள்வதற்கே வருவதாகக் கூறினார்.


Add new comment

Or log in with...