Monday, August 21, 2017 - 12:10pm
குழந்தை ஒன்றை பாடம் படிக்க சொல்லி அவரது தாய் கொடுமை படுத்துவது போன்ற காணொளி ஒன்று கடந்த சில தினங்களாக சமூகவலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.
அதில் ஒரு பெண் குழந்தைக்கு அவரது தாய் கணித பாடம் (இலக்கங்களை) கற்பிப்பதோடு, அக்குழந்தை அழுதவாறு அதனை கற்கின்றது.
இதன்போது, அக்குழந்தையின் தாய் மிக கோபமான முறையில் அவரிடம் நடந்துகொள்வதோடு, ஒரு சந்தர்ப்பத்தில் குழந்தையின் கன்னத்தில் அடிக்கிறார்.
இதன் காரணமாக, மிகப் பயந்த நிலையில் காணப்படும் அக்குழந்தை, தன்னிடம் அன்பாக கேட்குமாறு கைகளை கூப்பி அழுகின்றது.
குறித்த காணொளியை தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் வெளியிட்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலி, 'குழந்தையின் வலியும் கோபமும் புறக்கணிக்கப்பட்டு, பாடம் கற்பிக்கும் போது தாயின் இரக்கம் முற்றிலுமாக ஜன்னல் வழியாக வெளியேறிவிட்டது. இந்த காணொளியை பார்க்கும் போது அதிர்ச்சியாகவும், வருத்தமாகவும் உள்ளது. குழந்தையிடம் இப்படி மிருகத்தனமாக நடந்து கொண்டால், அக்குழந்தைக்கு பாடம் ஏறாது. இதை பார்த்து மிகவும் மனம் வருத்தமடைகிறது' என பதிவு செய்துள்ளார்.
இதே போன்று இந்திய கிரிக்கெட் வீரர் தவானும் இந்த காணொளியை பதிவேற்றம் செய்து குழந்தைகளை அவர்கள் போக்கில் படிக்க விடுங்கள் என்று கூறியுள்ளார்.
Add new comment