அரச, தனியார் பேரூந்து போட்டி; மன்னார் பிரதான பாலத்தில் விபத்து

 

யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னாருக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு பயணித்த தனியார் மற்றும் அரச பேரூந்துகள் மன்னார் பிரதான பாலத்தில் போட்டி போட்டு ஓடியதன் காரணமாக ஏற்பட்ட பாரிய விபத்தின் போது தனியார் பேரூந்து பாரிய விபத்திற்கு உள்ளாகிய போதும் பயணிகள் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.

குறித்த விபத்து நேற்று (25) வெள்ளிக்கிழமை இரவு 7.05 மணியளவில் மன்னார் பிரதான பாலத்தில் இடம் பெற்றுள்ளது.

குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,,,,

யாழ்ப்பாணத்தில் இருந்து நேற்று (25) மாலை 4.50 மணியளவில் தனியார் பேரூந்தும், அதனைத் தொடர்ந்து சுமார் 40 நிமிட இடை வெளியில் அரச பேரூந்தும் மாலை 5.30 மணியளவில் பயணிகளை ஏற்றிக்கொண்டு மன்னார் நோக்கி பயணித்துள்ளது.

குறித்த பேரூந்துகள் இரண்டும் சில மணி நேரங்களில் ஒன்றை ஒன்று முந்திக்கொண்டு போட்டி போட்டு மன்னாரை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.

இதன் காரணமாக தனியார் பேரூந்திற்கும், அரச பேரூந்திற்கும் இடையில் போட்டி ஏற்பட்டுள்ளது.

தனியார் பேரூந்தில் சுமார் 7 பயணிகள் வரை யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னார் நோக்கி பயணித்துள்ளனர்.

இதன் போது மன்னார் பிரதான பாலத்தில் அரச மற்றும் தனியார் பேரூந்துகள் பாதையை விடாது ஒன்றை ஒன்று முந்திக்கொண்டு செல்ல முற்பட்ட போது இரவு 7.05 மணியளவில் மன்னார் பிரதான பாலத்தில் தனியார் பேரூந்து பயணிகளுடன் பாதையை விட்டு விலகி விபத்திற்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தின் போது தனியார் பேரூந்தில் பயணித்த பயணி ஒருவரும், குறித்த பேரூந்தின் நடத்தனரும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

பேரூந்துகள் இரண்டும் ஒன்றையொன்று முந்திச் சென்றதன் காரணமாக ஏற்பட்ட போட்டியினால் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த மன்னார் பொலிஸார் விசாரனைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தொடர்ச்சியாக யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னார் நோக்கி பயணிக்கும் அரச மற்றும் தனியார் பேரூந்துகளுக்கு இடையில் போட்டி ஏற்பட்டு வருகின்றமையினால் பயணிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

இவ்விடையம் தொடர்பாகவும் பயணிகளின் பிரச்சினைகள் தொடர்பாகவும் பல முறைப்பாடுகள் வடமாகாண வீதி போக்குவரத்து அமைச்சரிடம் முன் வைக்கப்பட்ட போதும், அதனை கருத்தில் சுயநலத்துடன் நடந்து கொள்ளுவதாகவும் பயணிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.

எனவே குறித்த விபத்தில் பாரிய உயிர்ச் சேதங்கள் எவையும் ஏற்படாத நிலையில் உடனடியாக வடமாகாண வீதி போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் துரித விசாரனைகளை முன்னெடுத்து எதிர்வரும் காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம் பெறாது பயணிகளை பாதுகாக்க நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

(மன்னார் நிருபர் - லம்பர்ட் ரொசாரியன்)

 


Add new comment

Or log in with...