“எழுக தமிழ்” பேரணியில் பங்குபற்றாமை எதிர்ப்பு அல்ல

 

“எழுக தமிழ்” பேரணியில் பங்குபற்றாமை எதிர்ப்பும் அல்ல. தமிழரசு கட்சியை தாக்குவதை ஏற்கவும் முடியாது என தமிழரசு கட்சியின் மூத்த உறுப்பினரும், வடமாகாண சபை அவைத் தலைவருமான சீ.வி.கே.சிவஞானம் இன்று (25)  தெரிவித்தார்.

“எழுக தமிழ்” பேரணியில் கலந்துகொள்ளாமை குறித்து வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தியதையே தமிழ் மக்கள் பேரவையும் வலியுறுத்தியுள்ளது. போராட்டங்களை மேற்கொள்வது அவர்களின் உரிமை, பங்கு பற்றுவதும் பங்குபற்றாமல் இருப்பதும் எமது உரிமை. போராட்டத்திற்கு எதிரானவனல்ல, ஆனால் போராட்டத்தில் பங்குபற்றவில்லை.

தமிழ் மக்கள் பேரவையின் கோரிக்கை புதிதானதல்ல. அத்தனை கோரிக்கைகளும் தமிழ் தேசிய கூட்டமைப்பினரும், அதில் உள்ள கூட்டமைப்பினர் என சொல்லிக்கொள்பவர்களும் காலம் காலமாக சொல்லிக்கொண்ட பிரேரணைகள்.

தமிழரசு கட்சியின் இலக்கு நோக்கிய குறிப்புக்கள் கவலைக்குரியது. துற்போது புதிதாக சொல்ல வேண்டிய தேவை ஏற்படின் மீள சொல்ல முடியும். அதில் எந்தவித தப்புமில்லை. தமிழ் மக்கள் பேரவையின் கருத்துக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினையும் பாதிக்காது என நம்புகின்றேன்.

“எழுக தமிழ்” பேரணி தொடர்பில் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலய தூதுவரும் தன்னிடம் வினவியதாக விக்னேஷ்வரன் தெரிவித்தார்.

ஆரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை நேரம் கழித்து தெரிவிக்கலாம் என நினைத்தோம். ஆனால், தமிழ் மக்கள் பேரவையினர் முற்கூட்டியே தெரிவித்துவிட்டார்கள்.

2016 ஆம் ஆண்டு இறுதிக்குள் தீர்வினை எதிர்பார்த்து காலம் தாழ்த்தி கூற நினைத்தோம். அவர்கள் தமது கருத்துக்களை வெளியிட்டு விட்டார்கள். எழுக பேரணியில் பங்குபற்றாமை எதிர்ப்பு அல்ல. ஆனால் தமிழரசு கட்சியினை தாக்குவதனை ஏற்றுக்கொள்ள முடியாது.

தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் அனைத்தும் தமிழரசுக்கட்சி சார்ந்தவர்களுக்கு தெரியாத விடயமும் அல்ல. தமிழரசுக் கட்சிக்கு தெரியாததும் அல்ல. தமிழரசு கட்சியின் உறவினர்களும், நல்லெண்ணம் உடையவர்களும் தான் தமிழ்  மக்கள்பேரவையில் இருக்கின்றார்கள். ஆனால் அதில் உள்ள யாரும் எதிரிகளும் அல்ல என்றும் சுட்டிக் காட்டினார்.

(யாழ்ப்பாணம் குறூப் நிருபர் - சுமித்தி தங்கராசா)

 


Add new comment

Or log in with...