காணாமல் போன வர்த்தகருக்கு விளக்கமறியல்

 

றிஸ்வான் சேகு முகைதீன்

கடந்த செப்டெம்பர் 04 ஆம் திகதி காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த பண்டாரகம, அட்டுலுகம மாரவவைச் சேர்ந்த மொஹமட் நஷ்ரீன் எனும் 35 வயது வர்த்தகருக்கு எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது..

குறித்த நபர் இன்று (07) காலை, பஸ் ஒன்றின் மூலம் பலங்கொட ஹல்துமுல்லவிற்கு செல்வதாக கிடைத்த தகவலுக்கு அமைய, வழியில் வைத்து அவர் பொலிஸார் கைது செய்யப்பட்டார்.

குறித்த நபர், கடன் தொல்லை காரணமாக, இவ்வாறு பொய் கூறி, ஒழிந்திருப்பதற்கு முயற்சி செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

குறித்த நபர், திருகோணமலையில் இடம்பெறவிருந்த ஏலம் ஒன்றிற்காக செல்வதாக தெரிவித்துச் சென்றிருந்தாகவும் ஆனால் அவர் குறித்தான தகவல் எதுவும் இல்லை எனவும் அவரது தந்தையினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டை அடுத்தே குறித்த நபர் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அண்மையில் பம்பலபிட்டியைச் சேர்ந்த கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் இச்சம்பம் பெரும் பீதியை ஏற்படுத்தியிருந்தது.

குறித்தநபர், ரூபா 50 ஆயிரம் பணத்துடன் பிஸ்கட் பைக்கற்று ஒன்றைக் கொண்ட பையுடன் திருகோணமலைக்குச் சென்றதாக முக்கிய சாட்சியம் ஒன்று கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர், முதலில் திருகோணமலைக்குச் சென்றுள்ளதோடு, அங்கிருந்து யாழ்ப்பாணத்திற்கும் பின்னர் வவுனியாவுக்கும் பின்னர் கொழும்புக்கும் சென்றுள்ளார்.

பின்னர் கொழும்பிலிருந்து ஹல்துமுல்லவிற்கும் செல்லும் வழியிலேயே பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.

பொலிஸாரை திசைதிருப்பியமை, பொய்கூறி ஏமாற்றியமை உள்ளிட்ட பல்வேறு கூற்றச்சாட்டு தொடர்பில் திருகோணமலை நீதவான் எஸ். சரவணராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை எதிர்வரும் செப்டெம்பர் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

குறித்த வர்த்தகருடன் ஏலத்திற்குச் சென்றதாக தெரிவிக்கப்படும் மேலும் மூன்று வர்த்தகர்களும் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர்.

 


Add new comment

Or log in with...