றிஸ்வான் சேகு முகைதீன்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.president.gov.lk இனுள் அத்துமீறி நுழைந்து அதில் மாற்றங்களை மேற்கொண்ட சந்தேகநபர்கள் இருவரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில், குறித்த இணையத்தளத்தை முடக்கியதாக கடந்த ஓகஸ்ட் 29 ஆம் திகதி கைது செய்யப்பட்ட சிறுவர் நன்னடத்தை பிரிவில் வைக்கப்பட்டிருந்த மாணவன் (17) மற்றும் பேஸ்புக் மூலம் இணையத்தை முடக்குவதற்கு அவருக்கு வழிகாட்டியதாக தெரிவிக்கப்படும் மொரட்டுவையைச் சேர்ந்த ஜனித் மதுசங்க (27) ஆகியோரே இவ்வாறு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இன்றைய தினம் (02) கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய முன்னிலையில், குறித்த இருவரும் ஆஜர்படுத்தப்பட்டபோதே நீதவான் குறித்த உத்தரவை வழங்கினார்.
பாடசாலை மாணவனுக்கு ரூபா 10 இலட்சம் கொண்ட இரு சரீரப் பிணையும் ஜனித் மதுசங்கவிற்கு ரூபா 25 ஆயிரம் ரொக்கம் மற்றும் ரூபா 10 இலட்சம் கொண்ட 4 சரீரப் பிணைகள் ஆகியவற்றின் அடிப்படையில் பிணையில் விடுதலை செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டார்.
Add new comment