மணவறை ஏற்றச் சென்ற லொறி விபத்து; சிறுவன் பலி

 

RSM

பூண்டுலோயா நுவரெலியா வீதியில் டன்சினன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சம்பவ இடத்திலேயே சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பூண்டுலோயா பொலிஸார் தெரிவித்தனர்.

டிமோரக லொறியொன்று சுமார் 60 அடி பள்ளத்தில் பாய்ந்ததிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

நேற்று (09) பிற்பகல் இடம்பெற்ற குறித்த விபத்தில், பிரகலாதன் வினோசன் எனும் 13 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருகையில் பூண்டுலோயா டன்சினன் சீன் நடுத்தோட்டத்திலிருந்து திருமண வீடொன்றுக்கு மணவறை ஒன்றைச் குறித்த லொறியில் ஏற்றிச் சென்றுக்கொண்டிருந்தபோது டன்சினன் பகுதியில் வாகனம் வீதியை விட்டு விலகி 60 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில், அதில் பயணித்த சிறுவன் ஒருவனும் சாரதியும் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளனர். 

இதனை அடுத்து, அவர்கள் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிறுவன் மேலதிக சிகிச்சைக்காக கண்டி போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

வாகனத்தின் பின் பகுதியில் இருந்து சென்ற இன்னொரு சிறுவன் வாகனத்தில் சிக்குண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பூண்டுலோயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(நோட்டன்பிரிஜ் நிருபர் - மு.இராமச்சந்திரன்)

 


Add new comment

Or log in with...