Rizwan Segu Mohideen
றிஸ்வான் சேகு முகைதீன்
இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு இடையில் கட்டார் இராச்சியத்தின் ஊடாக மேற்கொண்டு வந்த போதைப் பொருள் வர்த்தக நடவடிக்கையின் பிரதான நபராக கருதப்படும் பாகிஸ்தான் நாட்டவர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று (25) அதிகாலை, கட்டார் விமானசேவைக்குச் சொந்தமான விமானம் மூலம் இலங்கைக்கு வந்துள்ள குறித்த நபரின் அட்டை பெட்டிகள் இரண்டில், போலியான அடிப்பகுதி ஒன்று தயாரிக்கப்பட்டு அதில் ஹெரோயின் பைக்கற்றுகள் ஒட்டப்பட்டு சூட்சமமான முறையில் போதைப் பொருளை கடத்தி வந்துள்ளார்.
சுமார் 5 கிலோகிராம் கொண்ட இவற்றின் மதிப்பு, ரூபா 5 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சந்தேகநபர், பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரிலிருந்து செயற்படும் சர்வதேச போதைப்பொருள் வர்த்தகரான ரொய்டட் கான் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் பொலிஸ் போதைத் தடுப்பு பிரிவினரால், ஒன்றரை கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட மாலைதீவு நபருக்கு, குறித்த சந்தேகநபரே போதைப்பொருள் விநியோகம் செய்துள்ளதற்கான தகவல்கள் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Add new comment