வவுனியா எஸ்எஸ்ஆர் முதலாளி கடத்தப்பட்டார்

 

RSM

வர்த்தகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு அச்ச நிலை
 
வவுனியா நகரின் பிரபல வர்த்தகர் ஒருவர் இனந்தெரியாதவர்களினால் நேற்று (21) மாலை கடத்திச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சண்முகம் செல்வராஜா என்ற 55 வயதுடைய வர்த்தகரே, தனது வர்த்தக நிலையத்தில் இருந்து நேற்று (21) மாலை சுமார் 6 மணியளவில் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற போது வீட்டு வாசலில் வைத்து கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக உறவினர்கள் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளனர்.

முறைப்பாட்டையடுத்து, வெளிக்குளம் இராணி மில் ஒழுங்கையில் உள்ள அவருடைய வீட்டிற்கச் சென்ற பொலிசார் அவருடைய மோட்டார் சைக்கிள், கைத்தொலைபேசி போன்றவற்றை வீட்டு வாசலில் இருந்து கண்டெடுத்துள்ளனர்.

இந்தச் சம்பவம் வவுனியா வர்த்தகர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.

இந்தச் சம்பவத்தை பொலிசாரும் உறுதி செய்துள்ளனர். இது குறித்து தமது கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிவித்த வவுனியா வர்த்தக சங்கத் தலைவர் ரீ.கே. இராஜலிங்கம் இந்த கடத்தல் சம்பவம் தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய மேலதிக நடவடிக்கை குறித்து இன்று (22) கூடி ஆராயவுள்ளதாகத் தெரிவித்தார்.

சண்முகம் முதலாளி என அழைக்கப்பட்ட சண்முகம் ஸ்ரோர்ஸ் மற்றும் அரிசி ஆலைகளின் உரிமையாளராகிய பிரபல முன்னாள் வர்த்தகர் சண்முகத்தின் புதல்வரான செல்வராஜா, எஸ்எஸ்ஆர் முதலாளி என நன்கு அறியப்பட்ட பிரபல வர்த்தகராவார்.

இவரை யார் என்ன தேவைக்காக கடத்தினார்கள் என்பது குறித்து பலரும் குழப்பமடைந்துள்ளனர். குறிப்பாக வர்த்தக சமூகம் பெரும் அதிர்ச்சிக்கும் அச்சத்திற்கும் உள்ளாகியிருக்கின்றது.

சம்பவம் பற்றி அறிந்ததும் பொலிஸ் உயரதிகாரிகள் உள்ளிட்ட பொலிசார் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டு சோதனைகள் நடத்தியதுடன் விசாரணைகளை நடத்தியிருக்கின்றனர்.

(யாழ்ப்பாணம் குறூப் நிருபர் - சுமித்தி தங்கராசா)

 


Add new comment

Or log in with...