அந்த கடைசிச் சொல்
என்னவென்று தெரியாது
இரணமும் தண்ணீரும்
இன்னும் எவ்வளவென்று தெரியாது.
அந்த நேரத்தில்
எங்கு எப்படி இருப்போமென்று தெரியாது.
இப்படியிருக்க,
என்னவோ செய்கிறோம்.
நமக்கான காற்றின் எல்லை
எதுவரையென்று தெரியாது
கால்கள் நடந்து முடிக்கும் நாள்
இன்றும் சரியாகத் தெரியாது.
உறங்கிய பின் எழுவோமாவென்று
விழிக்கும் வரை தெரியாது
இப்படியெல்லாமிருக்க,
என்னவோ செய்கிறோம்.
செய்து செய்து எத்தனையோ
சதிகளைச் செய்கிறோம்
தெரியாது தெரியாது என்று
தெரியாமலே செய்து முடிக்கிறோம்.
செய்யலாம்! செய்து முடிக்கலாம்!
முடிகிறபோது எல்லாம் முடிந்துவிடும்!
முத்துமணிச் சொல்லினிலே சித்தமெனக் கவி கூறி
வித்து வீசி விதைக்கின்ற சிந்தையிலே அன்போதி
பத்து நிலா நீயென்று பொய் பூசி தேன்சுரக்க
எத்தனையோ கவிசொன்ன ஏமாந்த காலமில்லை
நதியெனவே நீ நெளிந்து நடக்கின்ற எழிலதிகம்
மதியெனவே நீ ஒளிர்ந்து தவழ்கின்ற கலை, அதிகம்
விதியெழுதும் பேனையுடன் விரைந்தெழுந்த விழி வீச்சில்
சதியெழுதும் உன் முறுவல் சாய்கின்ற சோலையிலே
முக்கனியாம் உன் வனப்பை தக்காளிப்பழமென்றும்
சொக்கவைத்த பதத்தினிலே சொர்க்கமெனும் பாவோதி
இக்கரையில் பூத்து நின்று அக்கரையில் உனைத்தேடி
சக்கரையாய் இனிக்கின்ற அன்பருந்தி களிக்கின்றேன்.
கைவீசி நீ நடந்த காலத்தில் நான் மயங்கி
மெய்வீசி நான் விதைத்த மெய் சிலிர்க்கும் அன்பழகு
பொய்பூசிப்பாவோதி உன் வனப்பில் நான் குளித்து
மை பூசி வந்த உன்னை நான் அடையத் தேவையில்லை
கன்னியரே காளையரே விரைந்திடுவோம் - பெரும்
காடுகளை களனிகளாய் ஆக்கிடுவோம்
உண்ணுதற்கு உப உணவு செய்திடுவோம் - அரசின்
எண்ணமெல்லாம் பொன்னாக மாற்றிடுவோம்.
வீட்டினிலே பஞ்சத்தை ஓட்டிடவே - நம்
நாட்டினிலே தன்னிறைவை ஆக்கிடுவோம்
ஏட்டிக்குப் போட்டி போட்டு பயிர்கள் செய்து - வெளி
நாட்டிற்கு விளைவுகளை ஏற்றிடுவோம்.
பண்ணைகள் பற்பலவும் நிறுவிடுவோம் - பெரும்
கறவைகளைப் பரிவோடு வளர்த்திடுவோம்
உருசிக்கு உகந்த முட்டை பெற்றிடவே - நல்
உயரினக் கோழிகளைத் தேர்ந்திடுவோம்.
பல்கலைகள் கற்றுவிட்டோம் என்றிராமல் - இனி
எல்லோரும் ஒன்று கூடி உழைத்திடுவோம்
நல் கலைதான் விவசாயம் என்பதனை - மக்கள்
நன்கறியச் செய்திடவே நாடிடுவோம்.
விந்தை மிகு விஞ்ஞான உலகினிலே - நற்
சிந்தையுடன் சீரோடும் வாழ்ந்திடவே
என்றென்றும் விவசாயம் செய்திடுவோம் - இனி
எத்திக்கும் எங்கள் புகழ் பரப்பிடுவோம்.
மலட்டுத் துயர்
நீ.பி. அருளானந்தம்
பூத்ததில்லை
தவிர
இலையழகு காட்டும்
குரோட்டன் செடிகளுக்கு
மாயக் கவர்ச்சி ஒன்றுண்டு
நெருப்புக்
கொழுந்துபோல ஒரு ஜாதி;
வரி வரி போட்ட
கொஞ்சமாய் நரைத்த
இலையுள்ளதாகவும்
இருக்கும் இன்னும்
பலவித செடிகள்
எல்லாம் வெட்டி
சீர்திருத்தியதில்
மளமளவென்று இலகுவாக
இலையுதிரா செடிகள்
மட்டமாக நேர்நிரைக்கு
நிற்கின்றன
பூவுள்ள மரங்களுக்கு
நிரந்தர நிரந்தர காவல் தேவை
ஆனால்,
இலையடர்ந்த குரோட்டன்களுக்கு
காவல் ஏன் தேவை
பசிக்களைப்பே இல்லாத
குரோட்டன்களுக்கு
இலைக்காதுகள் நிறைய
கேட்பதற்கென்றும்
உண்டு போலும்
மலட்டு மரங்களாதலால்
குணத்தில் அவைகள்
முரசடித்து நிமிர்ந்து
நிற்கத்தான் செய்யும்
பொன் வண்டோ - இன்றேல்
வண்ணத்துப் பூச்சியோ
மிதந்து மிதந்து
தனக்கு மேலாய்
பறந்து போவது கண்டு
அவ்வேளைதான்
ஒரு செடியில்
கை நழுவி விழுகிறது
கொள்ளை நாளாய் விழாத
ஓர் பழுத்தல் இலை
உண்மை எதிரி
சோ. சண்முகப்பிரியா
அன்பான மொழிகள்,
ஆயுளை நீடித்திடும்
இன்பங்கள்
விட்டுக்கொடுத்திடாத, பாசம் கலந்த
உயிரின் உறவாய்
உதித்திடுவான், ஒருவன்
உயிர்த்தோழமையுடன்.
இன்பங்களில் இணைபிரியாது
துன்பங்களில் துணை கொண்டு
உயிரில் கலந்தவனாய்
உறவாடிடுவான்
உயிர்த்தோழனாய்.
வசந்தங்கள் எப்போதும்
வீசுவதில்லை
வாழ்த்துக்கள் எல்லாம்
பலிப்பதுமில்லை!
விதைக்கும் விதையெல்லாம்
முளைப்பதுமில்லை
முளைக்கும் பயிரெல்லாம்
விளைவு தருவதுமில்லை
உருவாகும் கருவெல்லாம்
சிசு ஆவது மில்லை
உதயங்கள் மறையாமல்
இருப்பதுமில்லை
கல்விக்கு கரைதனை
கண்டவரில்லை, தமிழ்
கவிதைக்கு யாப்புப்போல்
அழகுவேறொன்றுமில்லை
ஞஎன் வாழ்வின் சொர்க்கம்
இளவரசி அருளானந்தம்
அன்பென்ற வார்த்தைக்கு அர்த்தம் சொல்லி
அன்பால் அரவணைக்கும் அன்னையாய்
ஆசையாய் கதைகள் சொல்லி உணவூட்டி
மகிழும் பாசமான தந்தையாய்
அறிவுக்கு இலக்கணமாய் நல்ல
பாடம் சொல்லும் ஆசானாய்
தோல்விகளை வென்றெடுக்க தோள்
கொடுக்கும் தோழனாய்
எல்லா சொந்தமும் மொத்தமாக சேர்ந்த
சொர்க்கமாய் என் வாழ்வில்.....
வஞ்சம் இல்லா மனம்,
அதுபோலே முகம்
முகம் பார்த்தால் எல்லாம்
நிறைந்த இன்பங்கள் ஏராளம்
உரிமையாய் பிள்ளை நானும்
முகம் பார்க்க நாளும்
ஆவலாய் வரும் போதெல்லாம்
பாசமழையில் பக்குவப்படுத்தியது
எவ்வளவு ஆனந்தம் அத்தனையும்
சொல்லிட முடியாத அளவில்...
இமயம் தொடுமளவு
இன்னும் இன்னுமாக
அன்புடன் அரவணைத்து
அறிவுரைகள் பல சொல்லிய
உயரிய எண்ணங்கள்,
புதைந்திருந்த அர்த்தங்கள்தான்
எத்தனை...?
பாசத்தில் எத்தனை வடிவங்கள்
அத்தனைக்கும் சொந்தமாய் நீங்கள்
நீங்கள் சுமந்த பரிசுத்தமான
பாசத்தின் வேடம் தாங்கல்
என்றெல்லாம் என் வாழ்வில்
உன்னத உறவாய்....
பசியின் வலை...!
ரோஷான் ஏ. ஜிப்ரி
நீரில் எதிர்நீச்சலுடன்...
விழித்தபடி வலையின் கண்கள்
இருந்தும்;
ஏதேனும் ஒரு பாடு
மனப்பாரம் குறைக்கும்
புலால் விற்றகாசில்
பொழுது புலர்த்தி
சதாபொழுதை சமாளிக்க!
இடையில் வரவிருக்கும்
பெருநாள் - ஐந்து உசிரின்
புத்தாடை கனவு
வலையின் திறந்த கண்களின் வழியே
பழையபடி கலைந்து சிதறும்...!!
வில்லுக்குளத்தின் படுகைகளில்...!!
லிப்ஸ்டிக்!
யெம் உவைஸ்
ரோஜாவின்
இதழ்களில்
முள்ளின்
தழுவல்..
வடிகிறது
‘ரத்தம்’
அருமைத்தாய
எம். சி. கலீல்
முதுமையின் கோலம்
மூப்படைந்த பருவம்
ஏழ்மையின் சின்னம்
என்தாய் இன்று
தாயின் பெருமையை
தான் அறிவேன்
துன்பங்கள் எதுவுமின்றி
தூய்மையாய் நான்வாழ
என்றும் பாடுபடும்
என்னுயிர் தாய்
மனிதப் புனிதர்
மனதில் நிற்பவர்
அன்புடன் நேசிக்கும்
அருமைத் தாய்
என் இதயவானில் சிறகடிக்கும்
கோதைக் குயிலின் காதல் கவிதை
தித்திக்கும் தேனமுது!
தெவிட்டாத தெம்மாங்கு!
இன்னும் எடுத்துச் சொல்ல - காற்றை
தூதுவிட்டேன் கம்பனுக்கு
நீர்த்தொட்டியில் நீந்தும் மீன்போல - என்
மனத்தொட்டியில் நீந்தும் மான்விழியாளின்
நடையில் அபிநயம்!
கதையில் கவிநயம்!
இசையில் சுதிநயம்! - கண்
அசைவில் காதல் நயம்!
கண்ணன் கண்ட ராதைபோல
நான் கண்ட கோதைக் குயிலாள்
நிறத்தில் சிவப்புமில்லை! - என்
நெஞ்சம் வெறுக்கும் கறுப்புமில்லை!
நிஜத்தில் நேசப்பிறவி - காதல்
சுகத்தில் தித்திக்கும் தேன்னருவி!
நான்கு குணங்களின் நாயகியாய் வாழும்
நங்கையவள், அழகில்லை! ஆனாலும்,
கண்ணியத்தின் இருப்பிடம்;
கருணையின் பிறப்பிடம்! - ஆதலால்
சீதைக்கு ராமனாய் - அன்பு
கோதைக்கு நான் காதலன்...!