உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் மரநடுகைத் திட்டம்

உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு 'இன்றைய இயற்கையின் சுவாசத்தை வளர்ப்பதற்கான ஒரு நிறுவனத்தின் சமூகப்பொறுப்பு' எனும் தொனிப்பொருளில் 10 ஆயிரம் நிழல் தரும் மரங்களை நடுகை செய்யும் திட்டம் கல்முனையில் முன்னெடுக்கப்பட்டது. சம்பத் வங்கியின் நிதி நிறுவனமான சியாபத நிதி நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும், தவிசாளருமான ஆனந்த செனவிரெட்னவின் பணிப்புரையின் கீழ் நாடு தழுவிய ரீதியில் பல்வேறு நிறுவனங்களில் மர நடுகை திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அம்பாறை மாவட்டத்தின் கல்முனையில் அமைந்துள்ள 18 ஆவது விஜயபாகு காலாட் படைப்பிரிவில் மரநடுகையின் ஆரம்ப கட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.இதன் போது கல்முனை இராணுவ முகாமின் இரண்டாவது நிர்வாக கட்டளை அதிகாரி மேஜர் தயானந்த மற்றும் இராணுவ அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இதன் தொடர்ச்சியாக கல்முனையில் அமைந்துள்ள ஸ்ரீ லங்கா நௌ தீகாயு கடற்படை முகாமில் இத்திட்டம் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.இதன் போது குறித்த முகாமின் கட்டளையிடும் அதிகாரி பி.இ.எம்.டி தம்மிக கலந்து கொண்டு உத்தியோகபூர்வமாக இத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.

இதேவேளை சாய்ந்தமருது கோட்டக்கல்வி அதிகாரி என்.எம்.அப்துல் மலீக் தலைமையில் சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலயத்திலும் மரநடுகை திட்டமானது முன்னெடுக்கப்பட்டது. இதன் போது சாய்ந்தமருது கல்விக் கோட்டத்தை சேர்ந்த 10 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு பெறுமதி வாய்ந்த மரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் சியாபத திதி நிறுவனத்தின் கிழக்கு மாகாண பிராந்திய முகாமையாளர் முஹம்மட் பிரிம்சாத்,சியாபத நிதி நிறுவன கிளை முகாமையாளர் முஹம்மட் பரீஹ், கல்முனை கிளை முகாமையாளர் முஹம்மட் பாயிஸ், அதன் ஊழியர்களான ஜவாத், முஜீப், ஆதீஸ் திசிதரன் அஜய் பவாகரன், றிஹான் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் குறித்த பாடசாலை வளாககத்திலும் மரநடுகை முன்னெடுக்கப்பட்டது.

இந்த மாபெரும் மரநடுகை திட்டத்தில் தென்னை,மா, தோடை,மாதுளை, ஜம்பு, மரமுந்திரிகை உள்ளிட்ட பழமரக்கன்றுகளும் நிழல்தரு மரங்களும் உள்வாங்கப்பட்டு நடப்பட்டதுடன் அதிகமான இராணுவத்தினர், கடற்படையினர், அதிபர்கள், ஆசிரியர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றிருந்தனர்.

எதிர்காலத்தில் சூழலை பசுமையாக்கும் திட்டத்தின் கீழ் பொதுஇடங்கள், கடற்கரைப் பிரதேசங்கள், அரச நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், மதஸ்தாபனங்கள், வயல் காணிகள், பாடசாலைகள் உள்ளிட்ட சகல இடங்களிலும் பொதுமக்களின் பங்களிப்புடன் இத்திட்டம் சியாபத நிதி நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட உள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

எம்.ஐ.எம்.அஸ்ஹர்...

(மாளிகைக்காடு குறூப் நிருபர்)


Add new comment

Or log in with...