யாழ். மாவட்டத்தில் படையினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பதற்கு தீர்மானம் மிக்க விசேட குழு

- அமைச்சர் டக்ளஸ் - சாகல சந்திப்பில் இணக்கம்
யாழ். மாவட்டத்தில் படையினர் வசமிருக்கும் காணிகளை விடுவிப்பது தொடர்பான கலந்துரையாடலொன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முன்முயற்சியில், ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கா தலைமையில் நடைபெற்றது.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற இக்கலந்துரையாடலில், காணிகளை விடுவிப்பது தொடர்பாக தீர்மானம் மேற்கொள்ளக்கூடிய குழு ஒன்றை நியமிக்க தீர்மானிக்கப்பட்டது.

பாதுகாப்பு தரப்பினரையும் பொலிஸாரையும் உள்ளடக்கிய இக் குழு குறுகிய காலப் பகுதிக்குள், அதிகபட்சமாக விடுவிக்கக் கூடிய காணிகளை அடையாளப்படுத்த வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டது.

அதேபோன்று, வலி வடக்கு பிரதேசத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு காலப் பகுதியில் அரசுடமையாக்குவது தொடர்பாக வர்த்தமானி வெளியிடப்பட்ட சுமார் 6,000 ஏக்கர் காணிகளில் சுமார் 3,000 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டிருப்பதால் அந்த வர்த்தமானியை மீளப் பெறுவதற்கான அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டன.

காணி விடுவிப்பு தொடர்பான தெளிவூட்டல்களை மக்களுக்கு வழங்கி, மக்களின் ஒத்துழைப்புடன் காணிகளை விடுவிப்பதற்கு தேவையான காணி அளவீடுகளை மேற்கொள்வதற்கும், இன்னும் நலன்புரி முகாம்களில் தங்கியிருப்பவர்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுத்து மீள்குடியேற்றுவதற்கும் நேற்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

நேற்றைய கலந்துரையாடலில், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், முப்படைகளின் தளபதிகள் உட்பட சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.


Add new comment

Or log in with...