அமெரிக்கா மற்றும் சவூதி அரேபியாவின் மத்தியஸ்தத்திலான அமைதிப் பேச்சுவார்த்தையில் இருந்து சூடான் இராணுவம் விலகியுள்ளது. போட்டிக் குழுவான துணைப் படையினர் போர் நிறுத்தத்தை மதிக்கத் தவறியதாகக் கூறியே அது விலகியுள்ளது.
இதனால் ஏற்கனவே ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்திருக்கும் இந்தப் போர் மேலும் உக்கிரம் அடையும் அபாயம் அதிகரித்துள்ளது.
இராணுவம் மற்றும் துணைப்படைக்கு இடையில் கடந்த மே ஆரம்பத்தில் ஜித்தா நகரில் தொடங்கப்பட்ட பேச்சுவார்த்தை மூலம் தொடர்ச்சியாக மீறப்பட்ட இரு போர் நிறுத்தங்கள் எட்டப்பட்டன.
இந்நிலையில் இந்தப் போர் நிறுத்தம் கடந்த திங்கட்கிழமையுடன் காலாவதியாகவிருந்தது. இதனையடுத்து சூடான் தலைநகர் கார்டூமில் கடந்த செவ்வாய் பின்னேரம் கடும் மோதல் வெடிந்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் தலைநகரில் துருப்புகளிடம் பேசிய இராணுவத் தளபதி பத்தாஹ் அல் புர்ஹன், “வெற்றி வரை போராடுவதற்கு இராணுவம் தயார்” என்று அறிவித்துள்ளார்.
Add new comment