இந்திய பிரீமியர் லீக் இறுதிப் போட்டியில் விளையாட தோனிக்கு தடை விதிக்கப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
முதல் தகுதிச் சுற்றின்போது அவர் வேண்டுமென்றே நேரத்தை வீணடித்தார் என கூறப்படுகிறது. ஐ.பி.எல் கிரிக்கெட்டின் முதலாவது தகுதி சுற்றில் குஜராத்தை தோற்கடித்து சென்னை சுப்பர் கிங்ஸ் அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
இந்தநிலையில், குஜராத்–சென்னை அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் மாற்று வீரராக வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரண சேர்க்கப்பட்டார்.
அவர் ஒரு கட்டத்தில் மைதானத்தை விட்டு வெளியேறி 9 நிமிடங்கள் கழித்து மீண்டும் வந்தார். அவரை பந்துவீச அணித் தலைவர் தோனி அழைத்த போது, நடுவர் தடுத்து நிறுத்தினார். இப்போது தான் அவர் களத்திற்கு வந்திருக்கிறார், உடனடியாக அவரை பந்து வீச அனுமதிக்க முடியாது என்று நடுவர் கூறியுள்ளார்.
இதனால் அதிருப்திக்குள்ளான தோனி மற்றும் சக வீரர்கள் நடுவரிடம் சில நிமிடங்கள் வாதிட்டனர். பின்னர் நடுவரின் ஒப்புதலுடன் அந்த ஓவரை பதிரண வீசினார். இந்த காரசார விவாதங்கள் நடந்து முடிய எட்டு நிமிடங்கள் ஏற்கனவே முடிந்துவிட்டது. பின் பத்திரண பந்து வீச அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், ஐ.பி.எல் இறுதிப் போட்டியில் விளையாட சென்னை சுப்பர் கிங்ஸ் அணித் தலைவர் தோனிக்கு தடை விதிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. நடுவர்கள் தோனி மீது குற்றம் சாட்டினால் அவர் இறுதி போட்டியில் விளையாடாமல் போவதற்கு அதிகம் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒருமுறை மெதுவாக பந்து வீசியதற்கு தோனிக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அவர் நாளை (28) அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி அரங்கில் நடைபெறும் இறுதிப் போட்டியில் விளையாட முடியாமல் போக வாய்ப்பு உள்ளது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் விதியின்படி நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அடுத்த போட்டியில் விளையாட மறுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
Add new comment