களுத்துறை மாணவி மரணம் தொடர்பில் 4 சந்தேகநபர்களுக்கும் ஜூன் 09 வரை வி.மறியல்

- களுத்துறை மாணவிகள் துஷ்பிரயோகம் தொடர்பில் ஆசிரியருக்கும் விளக்கமறியல்

களுத்துறையிலுள்ள விடுதி ஒன்றின் மாடியில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த 16 வயது மாணவி தொடர்பான வழக்கின் பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட 4 சந்தேகநபர்களுக்கும் எதிர்வரும் ஜூன் 09 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இன்றையதினம் (26) சந்தேகநபர்களை களுத்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே நீதவான் குறித்த உத்தரவை வழங்கினார்.

கடந்த மே 06ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில், குறித்த சிறுமியை அழைத்து வந்த ஜோடி அன்றையதினம் பொலிஸ் நிலையத்திற்கு வந்த நிலையில் கைது செய்யப்பட்ட நிலையில், அதனைத் தொடர்ந்து அவர்கள் பயணித்த காரை செலுத்திய சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான 29 வயதான திருமாண நபர், கடந்த மே 09ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து மே 10ஆம் திகதி களுத்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவரை, 48 மணி நேரம் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில், குறித்த சம்பவம் இடம்பெற்ற வேளையில் கடமையிலிருந்த, அவர்கள் தங்கியிருந்த ஹோட்டல் உரிமையாளரின் மனைவி கடந்த மே 11ஆம் திகதி கைது செய்யப்பட்டு, மே 15 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 4 சந்தேகநபர்களுக்கும் எதிர்வரும் ஜூன் 09ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 16 மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோ பதிவு செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பிரத்தியேக வகுப்பு ஆசிரியருக்கும் எதிர்வரும் ஜூன் 09ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபரை இன்றையதினம் (26) களுத்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே குறித்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...