தற்கொலைக்கு முயற்சித்த இலங்கையர் இருவருக்கு புகலிடம்

மூன்றாவது நாடொன்றில் புகலிடம் வழங்க UK அனுமதி

டியோகோ கார்சியாவில் (Diego Garcia) தடுத்து வைக்கப்பட்டிருந்த போது தற்கொலைக்கு முயற்சி செய்ததாகக் கூறப்படும் ருவண்டாவுக்கு அனுப்பப்பட்ட இலங்கையைச் சேர்ந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் இருவருக்கு மூன்றாவது நாடொன்றில் புகலிடம் பெறுவதற்கு பிரிட்டன் அனுமதி வழங்கியுள்ளது.

இலங்கையைச் சேர்ந்த ஆண் ஒருவருக்கும் பெண் ஒருவருக்கும் மூன்றாம் நாடொன்றில் புகலிடம் பெறுவதற்கான அனுமதியை பிரிட்டன் வழங்கியுள்ளமைக்கான ஆவணங்களை பார்வையிட்டுள்ளதாக, The New Humanitarian செய்திகள் தெரிவித்துள்ளன. இலங்கை அரசாங்கத்தின் துன்புறுத்தல் குறித்து அச்சமடைந்துள்ளதால் அவர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்பப் போவதில்லை என, அந்த ஆவணத்தில் பிரிட்டன் தெரிவித்துள்ளது.

எனினும், மீள்குடியேற்றப்படும் நாடு எது என பிரிட்டன் தெரிவிக்கவில்லை.

ஹம்சிகா கிருஸ்ணமூர்த்தி (22) அஜித் சஜித்குமார் (21) என்ற இரண்டு இலங்கைத் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கே பிரிட்டன் மூன்றாம் உலக நாட்டில் புகலிடம் பெறுவதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.

2021 இல் டியாகோ கார்சியா தீவுக்குச் சென்ற 89 புகலிடக் கோரிக்கையாளர்களில் இவர்கள் இருவரும் காணப்பட்டனர்.

இவர்கள் சென்ற படகு சேதமடைந்ததை தொடர்ந்து பிரிட்டன் படையினரால் காப்பாற்றப்பட்டனர்.

இதன் பின்னர், 2022 இல் டியாகோ கார்சியா தீவில் இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை 200 ஆக அதிகரித்தது. இவர்களில் பலர், பின்னர் பிரிட்டனிடமிருந்து நிதி உதவியைப் பெற்று இலங்கை திரும்பினர், அல்லது படகுகளில் பிரான்சின் ரீயூனியன் தீவுக்குச் சென்றனர்.

எஞ்சியுள்ள ஏனைய 68 புகலிடக் கோரிக்கையாளர்களும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடனான தொடர்புகளுக்காக தாங்கள் சித்திரவதை செய்யப்பட்டதாகவும் பாலியல் ரீதியில் வன்முறைகளை எதிர்கொண்டதாகவும் தெரிவிக்கின்றனர்.

இதுவரை சுமார் 50 புகலிடக் கோரிக்கையாளர்களின் விண்ணப்பங்களை பிரிட்டனின் உட்துறை அமைச்சு ஆராய்ந்துள்ளது. இதில் அநேகமானவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் உங்களை இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்கான உத்தரவு விரைவில் வெளியாகுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


Add new comment

Or log in with...